திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் செண்பகா எனும் தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் விடுதி இயங்கி வருகிற நிலையில், அந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் நேற்று (30/07/2022) மதிய அளவில் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவேற்காடு காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விடுதி ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் கூறுகின்றன. மேலும் அவரது அறையில் இருந்த அவருடைய செல்போன் மற்றும் அவரது உடைமைகளை காவல்துறையினர் சோதனையிட்டனர்.
எந்த காரணத்திற்காக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தற்போது வரை தெரியவில்லை. அந்த மாணவி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், நர்சிங் மாணவி தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.