சென்னை ஓமந்தூரார் மருத்துமனை முன்பாக பணி நிரந்தரம் வேண்டி தற்காலிக செவிலியர்கள்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டத்தில் அவர்கள், ‘தமிழகத்தில் டி.என்.பி.சி, டி.ஆர்.பி போலவே, எம்.ஆர்.பி. தேர்வின் மூலமாக தேர்ச்சி பெற்று தற்காலிக பணி செய்து வருகிறார்கள் செவிலியர்கள். மற்ற அரசு தேர்வில் தேர்ச்சி பெற்ற உடனே அரசு பணி வழங்கி நிரந்தரம் செய்யும் அரசு எங்களுக்கு மட்டும் இரண்டு வருடம் பணி செய்யுங்கள் அதன் பிறகு பணி நிரந்தரம் செய்வோம் என்று முந்தையஅரசு சொன்னது. ஆனால், 7 வருடம் கழித்தும் இது நாள்வரையிலும் எங்களுக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை.
2015 ஆம் ஆண்டு மொத்தமாக 7,243 பேர் தேர்வு செய்து தற்காலிக பணியாக வழங்கப்பட்டது. அதன்பிறகு 2019ம் ஆண்டும் 4 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்பட்டது. இதில் 2015ல் நியமிக்கப்பட்டவர்களில் மொத்தமாக 2000 பேர் நிரந்தரம் செய்யப்பட்டனர். இன்னமும் மீதம் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கரோனா காலகட்டத்திலும் உழைத்த எங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது ஏன்.
இதன்பிறகு எம்.ஆர்.பி செவிலியர் சங்கம் பொதுச்செயலாளர் அம்பேத்கர் மற்றும் அரசு மணி ஆகியோர் அடங்கிய ஆறு பேர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.