Skip to main content

விபத்தில் இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்! அடையாளம் காட்டிய திமுக மோதிரம்!

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
om

 

சாலை விபத்தில் அடிபட்டு உடல் முழவதும் ரத்தக்கறையுடனும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் முதலுதவி சிகிச்சையினால் முகத்தை சுற்றிலும் துணி சுற்றப்பட்டிருந்ததால் அது கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியருக்கு  அது கணவர் தான் என்று அடையாளம் காட்டியது கையில் அணிந்திருந்த திமுக சின்னம் பொறித்த மோதிரம்.

 

சேலம் மாவட்டம் மேச்சேரி சீராமணியூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(வயது51).  இவரது மனைவி சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். சீனிவாசன் - சிவகாமி தம்பதிக்கு  ஹேமவாணி(14) என்ற மகள் உள்ளார்.

 

வழக்கம் போல நேற்று காலை சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு வேலைக்கு வந்து விட்டார். தனது அக்காள் பூங்கோதையை பைக்கில் அழைத்துச்சென்று புளியம்பட்டியில் விட்டுவிட்டு மீண்டும் மேச்சேரிக்கு  தனது  மோட்டார் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார் சீனிவாசன்.  அப்போது ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி என்ற இடத்தில் போன் பேசுவதற்காக சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.  


சீனிவாசன் சாலையின் ஓரத்தில் நின்று  போன் பேசிக்கொண்டிருந்போது,  மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற கார் அவர் மீது மோதியது. இந்த சம்பவத்தில் சீனிவாசன் தூக்கி வீசப்பட்டார்.   தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டிய நிலையில் விழுந்து கிடந்தவரை பார்த்து பதறிய அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து  ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  

சீனிவாசனை  மருத்துவர்கள் பரிசோதித்தனர்.    செவிலியர் சிவகாமியும் மருத்துவர்கள் சொன்னபடி சிகிச்சையளித்தார்.  சீனிவாசன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

அடிபட்டதில் சீனிவாசனின்  முகம் முழுவதும் ரத்தம் இருந்ததால், தலையை சுற்றி துணி கட்டப்பட்டிருந்ததால் அடிப்பட்டவர் யார் என அடையாளம் தெரியவில்லை.   மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் சீனிவாசன் உடலில் இருந்த ரத்தக்கறையை அகற்றிக்கொண்டிருந்தார் சிவகாமி.   அப்போது சீனிவாசன் கையில் இருந்த  மோதிரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  சீனிவாசன் திமுக பிரமுகர் என்பதால் அவர் கையில் இருந்த திமுக சின்னம் பொறிக்கப்பட்ட மோதிரத்தை பார்த்ததும் இது தன் கணவர் மோதிரம் மாதிரி தெரிகிறதே என்று பரபரத்தார்.   அவசர அவசரமாக தலையை சுற்றியிருந்த துணியை கழற்றியபோது , அது தன் கணவன் சீனிவாசன் என்று சிவகாமிக்கு தெரியவந்தது.   கணவனின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதார் சிவகாமி.  சிவகாமியின் பரிதாப நிலையைக்கண்டு சுற்றி நின்றிருந்த மருத்துவர்களும், செவிலியரும் செய்வதறியாமல் தவித்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.