Nurse incident near Tiruppur Collectorate

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இதன் அருகே தென்னம்பாளையம் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இளம் பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளனர். இதன் காரணமாகத் தலை மற்றும் கை சிதைந்த நிலையில் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதோடு இந்த பெண் தனியார் மருத்துவமனையின் செவிலியர் உடை அணிந்திருந்துள்ளார். உயிரிழந்த செவிலியர் யார்?, எதற்காகக் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து அருகில் உள்ள மருத்துவமனை மற்றும் குடியிருப்பு பகுதியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

அதே சமயம் சம்பவம் நடந்த இடத்தில் கொலை செய்யப் பயன்படுத்திய கல் உள்ளிட்ட தடயங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கை ரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே கொலை சம்பவம் நடந்திருப்பது திருப்பூர் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.