Skip to main content

மதுரையில் ‘அரசியல் பேசும்’ சுவரொட்டிகள்! -குமுறலை வெளிப்படுத்தும் மு.க.அழகிரி விசுவாசிகள்!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

ஜனவரி 30, மு.க.அழகிரி பிறந்த நாள். தென் மாவட்டங்களில் அவரது விசுவாசிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டாலும், மதுரையில் மு.க.அழகிரியை வாழ்த்தும் பிறந்தநாள் போஸ்டர்களுக்குப் பஞ்சமில்லை. எங்கும் காண முடிகிறது.

வாழ்த்து போஸ்டர் என்றாலும், அவரது ஆதரவாளர்கள், தங்களின் விசுவாசம், நம்பிக்கை, ஆதங்கம், வருத்தம் என அனைத்தையும் ஏதோ ஒருவகையில் வெளிப்படுத்தி விடுகின்றனர். போஸ்டர் வாசகம் குறித்து கேட்டால், பக்கம் பக்கமாக அவர்களால் வசனம் பேசமுடிகிறது. அவர்களின் கருத்துக்களைச் சுருக்கமாக இங்கே தொகுத்துள்ளோம்.  

 

Number of posters talking in Madurai!...


‘கழகத்தைக் காக்க வா! தமிழகத்தை மீட்க வா! தலைவா!’ என்று வாழ்த்தினால் என்ன அர்த்தம்?  “தற்போது பாதுகாப்பற்ற நிலையில் கழகம் உள்ளது. ஒரு தலைவனாக இருந்து தமிழகத்தை மீட்க அண்ணனால்தான் முடியும்.”  

 

Number of posters talking in Madurai!...


‘எதையும் தாங்கும் இதயம் – அறிஞர் அண்ணா. இதையும் தாங்கும் இமயம் நீயே அண்ணா!’ என்றால்,  “அண்ணா என்றால் அறிஞர் அண்ணாவைத்தான் குறிக்கும். அவருக்குப் பிறகு, ‘அ’னா என்றாலோ, அண்ணன் என்றாலோ, அது மு.க.அழகிரியின் அடையாளம் ஆனது. இதையும் தாங்கும் இமயம் என்பதற்கெல்லாம் அர்த்தம் சொல்லத்தான் வேண்டுமா? அவர் யாரால் எந்த அளவுக்கு நோகடிக்கப்பட்டார் என்பது யாருக்குத்தான் தெரியாது. ஆனாலும், அமைதி காத்து வருகிறாரே!”

 

Number of posters talking in Madurai!...


‘அஞ்சா நெஞ்சரே! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்.. உன்தன்னோடு உற்றோமே யாவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!’   “திருப்பாவை வரிகள் இவை! ஏழேழு பிறவி எடுத்தாலும், அண்ணன் ஒருவருக்கே நாங்கள் தொண்டர்களாக இருந்து தொண்டூழியம் செய்வோம் என்பதாகும்.”

 

Number of posters talking in Madurai!...


‘நிஜம் வெல்லும்!’   “இதற்கும் அர்த்தம் சொல்ல வேண்டுமா? அண்ணன் மட்டும்தான் நிஜம்! வேறு யாராக இருந்தாலும், நிழல்தான்!”

 

Number of posters talking in Madurai!...


‘ராசியானவரே! மாற்றம் 2021-ல் மறுபடியும் மாறும்..’ என்றால், “தென் மண்டல அமைப்புச் செயலாளராக அழகிரியண்ணன் இருந்த வரையிலும் திமுகவுக்கு வெற்றி முகம்தான்! என்றைக்கு அவர் புறக்கணிக்கப்பட்டாரோ, அன்றிலிருந்து இறங்கு முகம்தான்! கழகத்தில் ராசியானவர் என்றால் மு.க.அழகிரி ஒருவர்தான் என்பது கலைஞருக்கே தெரியும். 2021-ல் தற்போதைய நிலை நிச்சயம் மாறும்.”

 

Number of posters talking in Madurai!...


‘என்றும் கழகத்திற்கு எல்லாமே எங்க அண்ணன்தான்!’ – “எங்களைப் பொறுத்த மட்டிலும், கழகமும் அவரே! உறவும் அவரே! அண்ணன்தான் எங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறார்.”

 

Number of posters talking in Madurai!...


‘மலர் பாதையா? முள் படுக்கையா? எதுவாகினும் அண்ணன் வழியில்.. இந்த வழி ஒன்றுதான் என் வழி என்று நாம்!’ – “கட்சியில் கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்று இருந்தது. அது மலர் பாதை. இன்றோ, அங்கீகாரம் எதுவும் இல்லாமல் விலகி நின்று அரசியலை வேடிக்கை பார்க்க வேண்டியதிருக்கிறது. இது முள் படுக்கையைக் காட்டிலும் கொடுமையானது. அண்ணன் மீது கொண்ட பாசத்தினால், எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு நாட்களை நகர்த்தி வருகிறோம்.”

‘தலைமையேற்கும் எங்கள் தலைமையே!’,  ‘எது வந்தாகினும் எமக்கு நீயே!’,  ‘தமிழின தலைவரின் தடம் மாறா தலைமகனே!’ என்றெல்லாம் அண்ணனைப் புகழ்வதற்குக் காரணம் –  “எந்தச் சூழ்நிலையிலும் கட்சியை விட்டுக்கொடுக்காமல், எந்தப் பக்கமும் தாவாமல், ஒரே தடத்தில் அவர் பயணிப்பதுதான்!”

அடேங்கப்பா,  கோனார் தமிழ் உரை ரேஞ்சுக்கு அல்லவா மு.க.அழகிரி விசுவாசிகள், வாழ்த்து வாசகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.