Notice to VAO regarding panchayat clerk attack on farmer

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் கடந்த 02.10.2023 அன்றுகாலை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கங்காகுளம் என்ற கிராம ஊராட்சியிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisment

இந்த கூட்டத்தின் போது விவாயி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது அங்கு இருந்த கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பிய விவசாயியை எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று மக்கள் மத்தியில் வெளியாகி இருந்த நிலையில் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன்மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Advertisment

இந்த நிலையில் விவசாயியை ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் தாக்கியது தொடர்பாக ஏன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவில்லை என்று பிள்ளையார்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவி மற்றும் தலையாரி முத்துலெட்சுமி ஆகியோருக்கு வட்டாட்சியர் செந்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், இது தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.