Skip to main content

"இது நாள்வரை நடவடிக்கை இல்லை” - வெளிநடப்பு செய்த கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்!

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

"This is not an action to date, as repeatedly stated at the meeting" - Communist Party councilor who left the meeting

 

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம், கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஹேமலதா முத்துச்செல்வன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலைச்செல்வி சிலையழகன், ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் சண்முகம் வரவேற்றார். கூட்டத்தில் தளுகை ஊராட்சி ஒன்றிய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் முத்துக்குமார் பேசுகையில், “தளுகை ஊராட்சியில் கழிப்பறை கட்டுவதற்கு இடவசதி அற்றவர்களுக்கு, அரசு பொது இடங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டித் தரப்பட்டுள்ள 40 கழிப்பறைகள் எவ்வித பராமரிப்பும் இன்றி சீரழிந்துவருகிறது.

 

அதில் பஞ்சாயத்து நிர்வாகம் உட்பட அனைவரும் குப்பையைக் கொட்டி, குப்பைக்கிடங்காக மாற்றிவருகின்றனர். இவற்றை சீரமைத்து பயன்பாட்டில் கொண்டுவந்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பொது கிணறுகளுக்கு அருகிலும், நீர் நிலையிலும் குப்பைகள் கொட்டும் அவல நிலையை மாற்ற வேண்டும். மேலும் பிறப்பு - இறப்பு, வாரிசு சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் எளிதில் பெற, 2014ஆம் ஆண்டு தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ், சுமார் ரூ. 40 லட்சம் செலவில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டடம் இதுநாள்வரை மக்கள் பயன்பாட்டில் இல்லாததால், குடிகாரர்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்டநாள் கோரிக்கையான, முருங்கப்பட்டியில் உள்ள தனியார் வெடிமருந்து தொழிற்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைப் பலமுறை கூட்டத்தில் எடுத்துக் கூறியும் இதுநாள்வரை நடவடிக்கை இல்லை” எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.

 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்குப் பதில் அளித்த ஆணையர் விரைவில் தங்களது குறைகளை சரி செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் அத்தியப்பன் ஜெகநாதன், ராமச்சந்திரன், தனலட்சுமி, சந்திரா, மணிகண்டன், ராஜசேகரன், கண்ணதாசன், ரேணுகாதேவி M. சந்திரா, திட்ட மேலாளர் பால்ராஜ், ஒன்றிய மேற்பார்வையாளர் ராஜசேகர், ஒன்றிய பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்ட மன்றத்தில் வைக்கப்பட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய மேலாளர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.