Skip to main content

கைத்துப்பாக்கியும் 8 தோட்டாக்களும்; சிக்கிய வடமாநில இளைஞர்கள்!

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

North State youths caught police with gun and bullet

 

பள்ளிபாளையம் அருகே, வடமாநில வாலிபர்கள் இருவர் கைத்துப்பாக்கி, எட்டு தோட்டாக்களுடன் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.  

 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வால்ராஜபாளையத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வடமாநில வாலிபர்கள் இருவர் ஊருக்குள் புதிதாக வந்துள்ளனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள நூற்பாலைகளுக்கு வடமாநிலத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்த்து விடும் முகவர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.  இதையடுத்து அவர்கள் அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியும் உள்ளனர். தினமும் காலையில் எழுந்து வெளியே செல்வதும், இருட்டிய பிறகு வீடு திரும்புவதுமாக இருந்துள்ளனர். இவர்களின் மர்மமான நடவடிக்கைகள் மீது அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வந்தது. இதுகுறித்து வெப்படை காவல்நிலையத்திற்கு அப்பகுதி  மக்கள் தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் காவல்துறையினர், அந்த வாலிபர்களின் நடவடிக்கைகளை கடந்த சில நாள்களாக ரகசியமாக கண்காணித்துள்ளனர். ஜன.26ம் தேதி  மாலை, வாலிபர்கள் வீட்டுக்குள் இருப்பதை உறுதி செய்து கொண்ட காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.  

 

விசாரணையில், அவர்களில் ஒருவர் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த மணீஸ்குமார் (26) என்பதும், மற்றொருவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாகர் (19) என்பதும் தெரிய வந்தது.  அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்த ஒரு பெட்டியை சோதனை செய்து பார்த்தபோது அந்தப் பெட்டியில் ஒரு ரிவால்வர் கைத்துப்பாக்கியும், 8 தோட்டாக்களும் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த துப்பாக்கி, உரிமம் இல்லாத துப்பாக்கி என்பதும் தெரிய வந்தது.  

 

அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, தற்காப்புக்காக துப்பாக்கி வைத்திருந்ததாக தெரிவித்துள்ளனர். இரண்டு வாலிபர்களும் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், உண்மையில் அவர்கள் பள்ளிபாளையத்திற்கு வந்து வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததன் நோக்கம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுடைய கூட்டாளிகள் யாரேனும் இருக்கிறார்களா? ஏதேனும் சதித் திட்டத்துடன் வந்துள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து கியூ பிரிவு காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.  வடமாநில இளைஞர்கள் துப்பாக்கியுடன் பிடிபட்ட சம்பவம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.