Skip to main content

கோழிப்பண்ணைகளுக்கு ஆள்களை பிடித்து கொடுக்கும் வடமாநில முகவர் அடித்து கொலை... தொழில் போட்டியில் விபரீதம்... ஒருவர் கைது!

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

North Indian person passes away in Namakkal district


நாமக்கல் அருகே, கோழிப்பண்ணைகளுக்கு வடமாநிலத்தில் இருந்து கூலித்தொழிலாளர்களைப் பிடித்துக்கொடுக்கும் வடமாநில முகவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள எஸ். வாழவந்தி கே. புதுப்பாளையம் பகுதியில் கடந்த 7ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சடலமாகக் கிடந்தவர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தீபராஜ் சாகர் மகன் சிம்பு சாகர் (26) என்பது தெரியவந்தது. 

 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு வெளி மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களைக் கமிஷன் அடிப்படையில் அழைத்துவரும் முகவராக செயல்பட்டுவந்துள்ளார். இந்த தொழில் தொடர்பாக அவருக்கு சிலருடன் மோதல் இருந்துவந்ததும், அதனாலேயே அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

 

அவரை கொலைசெய்த மர்ம நபர்கள் குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்தனர். சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்மோல் (21), சம்பு ஆகிய இருவரும் சேர்ந்து சிம்பு சாகரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. பரமத்தி வேலூர் அருகே பதுங்கியிருந்த ராஜ்மோலை காவல்துறையினர் ஜூன் 9ஆம் தேதி கைது செய்தனர். 

 

அவரிடம் நடத்திய விசாரணையில், ராஜ்மோலும் வடமாநிலங்களில் இருந்து கூலித்தொழிலாளர்களைக் கமிஷனுக்கு நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணைகளுக்கு அழைத்துவரும் முகவர் வேலை செய்தது தெரியவந்தது. கூலித்தொழிலாளர்களை அழைத்து வருவதில் ராஜ்மோலுக்கும் கொலையுண்ட சிம்பு சாகருக்கும் இடையே தொழில் போட்டி இருந்துவந்துள்ளது. அதாவது ராஜ்மோல் கேட்கும் கமிஷனைக் காட்டிலும் குறைந்த கமிஷனுக்கு ஆட்களை நியமனம் செய்து தருவதாகவும், கூடுதல் ஊதியம் வாங்கித் தருவதாகவும் கூறி ராஜ்மோல் அழைத்துவந்த ஆட்களை எல்லாம் சிம்பு சாகர் தன் பக்கம் இழுத்துள்ளார். 

 

இதுபோன்று அடிக்கடி நடந்ததால், சிம்பு சாகர் மீது ராஜ்மோல் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக அவர்களுக்குள் கடந்த 6ஆம் தேதி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜ்மோலும், அவருடைய நண்பர் சம்புவும் சேர்ந்து சிம்பு சாகரை சமாதானம் பேச வரும்படி கே.புதுப்பாளையத்திற்கு அழைத்துள்ளனர். அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற அவர்கள், திடீரென்று சிம்பு சாகரை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர். அதன்பிறகு சடலத்தை அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். ராஜ்மோல் அளித்த தகவலின்பேரில் தலைமறைவாக உள்ள அவருடைய நண்பர் சம்புவை காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.