கரோனா தடுப்பு பற்றி சென்னை மண்ணடியில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் "வடசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் கரோனா பரவலும் அதிகமாக இருக்கிறது. மூன்று மண்டலங்களில் முதியவர்கள் வெளியே செல்வதைதடுக்க இளைஞர்கள் அடங்கிய தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதியவர்களுக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட பொருட்களை தன்னார்வலர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 28 நாட்களில் தொற்று கண்டறியப்படாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. கூடுதலாக 500 சுகாதார ஆய்வாளர்கள், லேப் டெக்னீசியன்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
தனிநபர் இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட அடிப்படையான பாதுகாப்பு விதிகளை மக்கள் கடைப்பிடிப்பது அவசியம். சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ள மூன்று மண்டலங்களில் 10 நாளில் கரோனா பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது. நோய் தொற்றை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதால் நிச்சயம் பலன் இருக்கும்" என்றார்.