திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக2நாள் சுற்றுப்பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று முன்தினம் திருவண்ணாமலை வந்தார். இதையடுத்து, அவர் திருவண்ணாமலை கோவிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு,தெற்கு கோபுரம் எனப்படும் திருமஞ்சனகோபுரம் வழியாக உள்ளே வந்த அவருக்கு கோவிலின் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு சென்று வழிபட்டார். கோவிலில் தரிசனம் செய்ய வந்த அவருக்கு, திருக்கோவில் சார்பாக மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், கிரிவலப் பாதையில் நிருதிலிங்கம் என்ற இடத்திலிருந்து திரு நேர் அண்ணாமலை என்ற இடம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தனது குடும்பத்துடன் அவரும் கிரிவலம் நடந்து சென்றார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அருணாச்சலேஸ்வரர் கோவிலின் அருகாமையில் கிரிவலப் பகுதியில், போதிய கழிவறைகள் இல்லாததை அறிந்தும் அசைவ உணவு விற்கும் உணவகங்கள் இருப்பதைப் பார்த்தும் வருத்தமடைந்தேன். இது தொடர்பாக பக்தர்கள் தங்கள் மன வேதனையைப் பகிர்ந்து கொண்டனர். உணவு என்பது முழுக்க முழுக்க ஒருவரது தனிப்பட்ட விருப்பம் என்று நான் நம்புகிறேன். அது அவ்வாறே இருக்க வேண்டும். அதே சமயம் அருணாச்சலேஸ்வரரின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.