Skip to main content

தரமற்ற மின்கம்பம்... தொழிலாளர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு... தொழிலாளர்கள் குற்றச்சாட்டு

Published on 09/07/2020 | Edited on 09/07/2020

 

Electricity

 

தரமற்ற மின்கம்பத்தில் ஏறி பணியாற்றியபோது மின்கம்பம் உடைந்து விழுந்ததில் தொழிலாளர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் மற்றொரு தொழிலாளர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் விழுப்புரம் மின் கழக தொ.மு.சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

 

மேலும், விழுப்புரம் மின் திட்டத்தில் களப் பணியாளர்கள் பற்றாக்குறையால், அலுவலர்களின் நிர்பந்தத்தில் மிகக் குறுகிய நேரத்தில் அவசரமாகப் பணிகளைச் செய்ய நேரிடும். அந்தந்த பிரிவு அலுவலர்கள், பிரிவு அலுவலகத்தில் பணி புரியும் முகவர்கள், மின் பாதை ஆய்வாளர்கள், கம்பியாளர்களுக்கு வேலை செய்யக் கட்டளை வரும்போது பிரிவு அலுவலருக்குப் பயந்து அவர் சொல்லும் முன் அனுபவம் இல்லாத தினக் கூலிப் பணியாளர்களோடு சென்று பணியாற்றுவதாலும் தரமற்ற தளவாடச் சாமான்களைக் கொண்டு பணிகளைச் செய்வதாலும்தான் விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. 

 

விபத்தில் சில சமயங்களில் தொழிலாளர்கள் மரணிக்கும் சம்பவமும் நிகழ்கிறது. மரணம் அடையும் நிரந்தர பணியாளருக்கு ரூ.3. லட்சம் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, ஊனம் அடைந்தவருக்கு நீண்ட போரட்டத்திற்குப் பிறகு காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை, அவ்வளவுதான். 

 

அது போன்ற அதிர்ச்சி தரும் நிகழ்வு 07.07.2020 திண்டிவனம் கோட்டம் திருவக்கரை பிரிவு அலுவலரால் அரங்கேறியுள்ளது. செஞ்சி பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட முன் அனுபவம் இல்லாத தினக்கூலித் தொழிலாளர்கள் சுமார் 20 நபர்களைக் கொண்டு பிரிவு அலுவலக களப்பணிகளை 3 விதமாகப் பிரித்து பணி ஒதுக்கீடு செய்து களப்பணி வாரியத்தின் மூலம் பிரிவு அலுவலரால் வழங்கப்பட்ட 9 மீட்டர் தரமற்ற கம்பம் மற்றும் தளவாடச் சாமான்களைப் பயன்படுத்தி உயர் மின் அழுத்த பாதை பணிகளை மேற்கொண்டனர். அப்போது பிடுங்கி வளைந்த காரணத்தினால் மின் கம்பம் உடைந்ததால் உச்சியில் ஏறி பணி செய்து கொண்டிருந்த கோ.தங்கமணி என்கிற தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தும் ஏ.பிரகாஷ் என்பவர் அடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வருவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

 

இது போன்ற ஒப்பந்த அனுமதி பெறாமல் நமது விழுப்புரம் மின் திட்டத்தில் பல பிரிவுகளில் (குறிப்பாக திண்டிவனம், செஞ்சி கோட்டம்) பிரிவு அலுவலரின் செயல்களைக் கோட்ட/திட்ட அலுவளர்களிடம் மின் கழக தொ.மு.சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டும் இது பற்றி இந்த விபத்து வரை செவி சாய்க்கவில்லை.

 

இனியாவது கோட்ட/திட்ட நிர்வாகம் செவி சாய்த்து தன்னிச்சையாகச் செயல்படும் உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின்பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து  உயிர் பலியினைத் தடுக்க வேண்டும். மேலும், திட்டத்தில் கொள்முதல் செய்து அளிக்கப்படுகிற தளவாடச் சாமான்களைப் பரிசோதனை செய்யும் அலுவலர்கள் (Check Measurement Officer) பணியாளர்களின் உயிர்களைத் தங்களது உயிராக நினைத்து நேரடியாக பண்டக சாலைக்குச் சென்று தளவாடப் பொருட்களை சோதனை செய்து களப் பணியாளர்களின் உயிர் பலியைத் தடுத்திடவும் உங்களின் ஒருவராகக் கேட்டு கொள்கிறோம் என விழுப்புரம் மின் கழக தொ.மு.சங்கம் கூறியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.