Skip to main content

வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; சேலம் மாவட்ட வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

Candidature filing starts today; Places where Salem district candidates can file petitions announced!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த பிப். 26ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டது. அப்போது முதல், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் வேட்புமனுத் தாக்கல், மார்ச் 12ஆம் தேதி தொடங்கி, 19ஆம் தேதி முடிவடைகிறது.

 

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 20ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 22ஆம் தேதி கடைசி நாள். ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

 

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடங்களின் விவரம் வருமாறு:

 

கெங்கவல்லி: 

கெங்கவல்லி தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலரான அமுதன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். தொடர்புக்கு: 9445000222.

 

ஆத்தூர்: 

ஆத்தூர் தனி தொகுதிக்கான வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியருமான துரையிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். ஆத்தூர் ஆர்டிஓ அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படும். தொடர்புக்கு: 94450 00434, 75987 02331.

 

ஏற்காடு:

ஏற்காடு பழங்குடியினருக்கான தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரியும், சேலம் முத்திரைக் கட்டணப் பிரிவு தனித் துணை ஆட்சியருமான கோவிந்தனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படும். தொடர்புக்கு: 96299 94666.

 

ஓமலூர்:

ஓமலூர் தொகுதிக்கான வேட்பாளர்கள், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளருமான (நிலம்) கீதா பிரியாவிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். தொடர்புக்கு: 94988 42848.

 

மேட்டூர்:

மேட்டூர் தொகுதிக்கான வேட்பாளர்கள், மேட்டூர் சார் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சரவணனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படும். தொடர்புக்கு: 94450 00435.

 

எடப்பாடி:

எடப்பாடி தொகுதிக்கான வேட்பாளர்கள் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியும், சேலம் கலால் பிரிவு உதவி ஆணையருமான தனலிங்கத்திடம் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். தொடர்புக்கு: 94450 74592.

 

சங்ககிரி: 

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான வேடியப்பனிடம் சங்ககிரி தொகுதிக்கான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படும். தொடர்புக்கு: 94449 09084.

 

சேலம் மேற்கு:

சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரியும், சமூக பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியருமான சத்தியபால கங்காதரனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படும். 

 

சேலம் வடக்கு:

சேலம் வடக்கு தொகுதிக்கான வேட்பாளர்கள், சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். சேலம் வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மாறனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். தொடர்புக்கு: 94450 00433.

 

சேலம் தெற்கு:

சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரியும், சேலம் மாநகராட்சி ஆணையருமான ரவிச்சந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். இத்தொகுதிகான வேட்பாளர்கள் சேலம் அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். தொடர்புக்கு: 94892 94899.

 

வீரபாண்டி:

வீரபாண்டி தொகுதிக்கான வேட்பாளர்கள், உத்தமசோழபுரத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையத்தில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரியுமான பண்டரிநாதனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். தொடர்புக்கு: 86108 43987.

 

இணைய வழியிலும் தாக்கல் செய்யலாம்: 

 

இத்தேர்தலில் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை இணையவழி மூலமாகவும் தாக்கல் செய்யும் வசதியையும் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. இணையவழி மூலம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு http://suvidha.eci.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து, பின்னர் அதனைப் பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.

 

வேட்புமனு படிவம் 2ஏ, உறுதிமொழிப் படிவம், படிவம் 26, அஃபிடவிட் படிவம், சுய விவரங்கள் குறித்த படிவம், வேட்பாளரின் மாதிரி கையொப்பத்திற்கான படிவம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆகியவற்றை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

 

சனி, ஞாயிறு கிடையாது:

 

வேட்புமனுக்களை மார்ச் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனுக்கள் பெறப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனுக்கள் பெறப்படாது. 

 

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு குறைந்தபட்சம் ஒருநாள் முன்னதாக, தேர்தல் செலவு கணக்குகளைப் பராமரிப்பதற்காக வேட்பாளர் பெயரிலோ அல்லது வேட்பாளர் மற்றும் அவருடைய முதன்மை முகவர் ஆகிய இருவர் பெயரில் கூட்டாகவோ, வங்கியில் பிரத்யேக கணக்கு தொடங்கி, அதன் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஒப்படைக்க வேண்டும். 

 

தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் அதிகபட்சம் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்குள் வேட்புமனு தாக்கல் செய்பவர் மற்றும் அவருடன் 2 நபர்கள் என அதிகபட்சம் 3 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

 

சுயேச்சை வேட்பாளர்களை அடையாளம் காட்டுவதற்கு 10 நபர்கள் உடன் வந்தாலும், மனுத்தாக்கலின்போது அவருடன் 2 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

 

வேட்புமனுவை, வேட்பாளரோ அல்லது முன்மொழிபவரோ தாக்கல் செய்யலாம். மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர் மற்றும் அவருடன் வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 

 

வேட்புமனு கட்டணம்:

 

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 8 தொகுதிகளுக்கும் தேர்தல் வேட்புமனு கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக அல்லது ஆர்பிஐ அல்லது கருவூல சலான் மூலம் செலுத்த வேண்டும்.

 

வேட்பாளர் பட்டியல் சமூகத்தினராக இருக்கும்பட்சத்தில் 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் அதற்கான சாதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

 

கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு ஆகிய தனி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவோ அல்லது ஆர்பிஐ அல்லது கருவூல சலான் மூலமாகவோ செலுத்தலாம்.

 

வேட்புமனுக்கள் மார்ச் 22ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு, சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராமன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.