முதன்முறையாக கரோனா இந்தியாவிற்குள் பரவியதாக தகவல்கள் வெளியான காலத்தில், '144' தடை விதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய அரசு அறிவித்தது. அந்த நகரங்களின் பட்டியலில், ஈரோட்டின் பெயரும் அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா பரவல், சிகிச்சை, ஊரடங்கு எனப் படிப்படியாகத் தளர்வுகள் உருவான நிலையில், தற்பொழுது மீண்டும் கரோனா புது ரூபம் எடுத்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உருமாறிய புதிய கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது சாதாரண கரோனா தொற்றை விட வீரியம் மிக்கதாக இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, இங்கிலாந்துடனான விமானப் போக்குவரத்துச் சேவை பல நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து சமீப காலத்தில் இந்தியாவுக்கு வந்தவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல், தமிழ்நாட்டிலும் தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
அதன்படி இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 15 -ஆம் தேதிக்குப் பிறகு, ஈரோட்டுக்கு வந்த 21 பேர், அடையாளம் காணப்பட்டு அவர்களை சுகாதாரத்துறையினர் வீடுகளில் தனிமைப்படுத்தி தீவிரக் கண்காணிப்பில் வைத்துள்ளனர். மேலும். அந்த 21 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என முடிவுவந்தது. எனினும், சுகாதாரத் துறையினர் வீடுகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள அவர்களை அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், மேலும் 28 பேர் இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்துள்ளனர். இந்த 28 பேரும் அடையாளம் காணப்பட்டு, அவரவர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சுகாதாரத்துறையினர் சார்பில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இவர்கள் அனைவருக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்ற முடிவு வந்துள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறும்போது,
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்தவர்களின் முழு விவரம் சேகரிக்கப்பட்டு, எல்லோரும் அடையாளம் காணப்பட்டு, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். முதற்கட்டமாக, இங்கிலாந்திலிருந்து 21 பேர் ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அவர்களைக் கண்டறிந்து வீடுகளில் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஈரோடு மாவட்டத்திற்குப் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த மேலும் 28 பேரை அடையாளம் கண்டு, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர்களுக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்ற முடிவுவந்துள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை அந்தந்த பகுதி சுகாதாரத்துறையினர் செய்துவருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கடந்த 15 நாட்களில் ஈரோடு வந்தவர்கள், அவர்களே தாங்களாக முன்வந்து, கரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்காக யாரும் தயக்கம் கொள்ளக் கூடாது" என்றார்.
'உஷ் அப்பாடா... வெளிநாட்டிலிருந்து வந்த யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை' என நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது ஈரோடு.