Skip to main content

பள்ளிகளில் இனி அச்சிட்ட வருகை பதிவேட்டிற்கு வேலை இல்லை.... இனி எல்லாமே 'ஆப்' தான்; ஆக. 1 முதல் நடைமுறை!! 

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

No more printed attendance registers in schools....everything is 'App'! Aug. 1st Practice!!


அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை விவரங்கள் அச்சிட்ட வருகைப் பதிவேடு புத்தகம் மற்றும் செல்போன் செயலி மூலம் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 1- ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல், செயலியில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

 

தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

 

அதில் கூறியுள்ளதாவது, மாணவர்களின் இடைநிற்றலால் ஏற்பட்டுள்ள குறைபாட்டினை சரி செய்து, அவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்த வேண்டும். 2023- 2024ம் கல்வி ஆண்டிற்கான நலத்திட்டங்கள் வழங்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து கொள்ள வேண்டும். 

 

முதல்வரின் அறிவிப்புகளை முறையாக செயல்படுத்தவும், திட்டங்கள் உரிய நேரத்தில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு செல்வதையும் உறுதி செய்ய வேண்டும். அரசு தொடக்க மற்றும் நர்சரி பள்ளிகளின் நிலைமைகளைக் கண்டறிந்து,  குறைபாடுகள் இருப்பின் அதனை சரி செய்யும் வகையில் அரசின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும். 

 

மாதிரி பள்ளிகளில் நடப்புக் கல்வி ஆண்டுமுதல் அந்தந்த தலைமை ஆசிரியரே நிர்வாக அதிகாரியாக செயல்பட அனுமதிக்க வேண்டும். மாதந்தோறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளிகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு தொடர்ந்து வீட்டுப்பாடம் கொடுப்பதை ஆய்வு செய்ய வேண்டும். 

 

பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில், அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்தும் கூட மாற்றுப்பணி மூலம் பெற்றுக் கொள்ளலாம். துவக்க அனுமதி பெறாத மெட்ரிக் பள்ளிகள் தொடர்ந்து செயல்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஏதேனும் ஒரு வகுப்பிற்கு பாடம் கற்பிக்க அறிவுறுத்த வேண்டும். பள்ளி தொடர்ந்து நடைபெற்று வரும்போது பள்ளிக்கோ, குறிப்பிட்ட வகுப்பிற்கோ இடையில் விடுமுறை அளிக்கக் கூடாது. 

 

கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியின்றி விடுமுறை அளித்தல் கூடாது. ஆசிரியர்கள் தொடர் விடுப்பில் இருக்கும்போது கற்பித்தல், கற்றல் தடைபடாமல் இருக்க மாற்று ஆசிரியரோ அல்லது விடுமுறை முடிந்து வந்த ஆசிரியரோ தொடர் சிறப்பு வகுப்புகளை நடத்த அறிவுறுத்த வேண்டும். 

 

ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை விவரங்களை  வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம். வருகைப் பதிவினை செயலி வாயிலாக பதிவு செய்தால் மட்டும் போதுமானது.

 

ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல்,  அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்க tnsed_school செயலியை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் உபரி பணியிடங்களை தேவைப்படும் அரசுப்பள்ளிகளுக்கு மாற்றுப்பணியாக வரும் 15 தேதிக்குள் வழங்க வேண்டும். 

 

நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், தொழிற்கல்வி பாடப்புத்தகங்கள் பெற்று வழங்குவதில் ஏற்படும் காலதாமத்தை குறைக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து வகை மன்றச் செயல்பாடுகளும் தொடர்ந்து செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் 3வது வாரம் மன்ற செயல்பாடுகளின் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். 

 

ஓவிய ஆசிரியர்களுக்கு வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் வருகையை வகுப்பு வாரியாக 'எமிஸ்' தளத்தில் பதிவிட வேண்டும். சம்பந்தப்பட்ட இணை இயக்குநர்கள் அனுமதியின்றி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் எந்தவித மாறுதலும் வழங்கக் கூடாது. 

 

தொழில்கல்வி பிரிவு அனுமதியின்றி வகுப்புகள் செயல்படக் கூடாது. அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சிவகங்கை, விருதுநகர், நாமக்கல் மாவட்டங்களில் அதிகமாக உள்ளன. ஆகவே, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.