Skip to main content

எத்தனை ரெட் அலர்ட் கொடுத்தாலும் இது தான் எங்க வீடு... கண்ணீர் வர வைக்கும் கிராமத்து வாழ்க்கை!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

வடகிழக்கு பருவமழை காரணமாக அதிக மழையாகப் பெய்யும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் எச்சரிக்கையாக இருங்கள் என்று வானிலை ஆய்வு மையங்கள் தகவல்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 

சென்னை உள்படத் தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்து மாடி மேல மாடி வச்சு கட்டினாலும் கீழே இறங்க முடியாத அளவுக்குத் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. பாலாற்றில் 100 வருடங்களுக்குப் பிறகு முழு கொள்ளளவில் தண்ணீர் ஓட, ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள் சாய்ந்து விழும் காட்சிகள் பதற வைத்திருக்கிறது. இப்படி மாடி வீடுகளே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் சாதாரண குடிசை வீடுகள் தண்ணீரோடு சேரும் சகதியுமாக மாறியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு புதுக்குடியிருப்பு பகுதியில் கூலி வேலை செய்யும் தொழிலாளிகளின் 40 வீடுகள். அத்தனையும் 7 அடி உயரத்தில் உள்ள கீற்றுக் கொட்டகைகள். சுற்றிலும் சேலைத் துணிகளும், கிழிந்த பிளக்ஸ் பேனர்களுமே மேற்கூரையாகவும், சுற்றுச் சுவராகவும் உள்ளது. தவழ்ந்துதான் வீட்டுக்குள் செல்ல வேண்டும். அந்த தெருவிலிருந்த ஒற்றை ஓட்டு வீடும் நேற்று கொட்டிப்போனது. சுற்றிலும் மழைத் தண்ணீர் சூழ்ந்து குடிசைக்குள்ளும் தண்ணீர். சமைக்கக் கூட வழியில்லை. சாக்குகளைத் தரையில் விரித்து அமர்ந்து மட்டும் இருக்கலாம். ஆடு, மாடுகள் ஒரு பக்கம் மனிதர்கள் மற்றொரு பக்கமான வசிப்பிடம். இது தான் இந்த பகுதியின் வாழ்விடம்.

 

ஒரு தார்ப் பாய் மூடிய குடிசைக்குள் பிறந்து 13 நாட்களேயான பச்சிளங் குழந்தையை ஈரத் தரையில் சாக்கு விரித்துப் படுக்க வைத்திருந்த காட்சி கண்களைக் கலங்கச் செய்தது. ''எங்களுக்குனு இருக்கிற குடிசையில தான் குழந்தையையும் வச்சிருக்கலாம்'' என்றார் அந்த தாய்.

 

இது மேற்பனைக்காடு கிராமத்தில் மட்டுமல்ல  தமிழகத்தில் லட்சக்கணக்கான கூலி வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்விடங்களும் இப்படித்தான் உள்ளது. எப்போது மாறும் இவர்களின் வாழ்க்கை. என்றாவது ஒரு நாள் நாங்களும் மெத்தை வீடு கட்டுவோம் என்ற அவர்களின் லட்சியம் கனவாகவே போகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.