NO INCOME YOUTH INCIDENT SALEM DISTRICT

சேலம் சீலநாயக்கன்பட்டியை அடுத்துள்ள தாசநாயக்கன்பட்டி சுப்ரமணியம் நகரைச் சேர்ந்தவர் பரஞ்சோதி. இவருடைய மகன் பிரதீப்ராஜ் (29). பொறியியல் பட்டதாரியான இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

Advertisment

கரோனா ஊரடங்கு உத்தரவால், அவர் கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தபடியே அலுவலக பணிகளைச் செய்து வந்தார். இவருக்கும் ஓமலூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

Advertisment

இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடக்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் தீவிரமாக செய்து வந்தனர்.இந்நிலையில், ஜூலை 6- ஆம் தேதி இரவு, தனது வீட்டில் பிரதீப்ராஜ் திடீரென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மகன் தூக்கிட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து மல்லூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரதீப்ராஜ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அவருடைய அறையில் இருந்து பிரதீப்ராஜ் கைப்பட எழுதிய ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அது, அவருடைய தற்கொலை குறிப்பு கடிதம் போல் இருந்தது.

http://onelink.to/nknapp

அந்த கடிதத்தில், ''திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தும் அளவுக்கு இப்போது பொருளாதாரம் இல்லை. அதனால் தற்கொலை முடிவை எடுக்கிறேன்,'' என்று குறிப்பிட்டு இருந்தார். தற்கொலைக்கு போதிய வருமானம் இல்லாததுதான் காரணம் அல்லது காதல் விவகாரம் உள்ளிட்ட வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.