‘மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்’ - மீன்வளத்துறை உத்தரவு

“No fisherman should go to sea” - Fisheries Department order

நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஓரிரு தினங்கள் முன்பு தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18-ம் தேதி வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர்களுக்கும் மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

fisherman Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe