
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி, 26 வது வார்டு காஜா நகர் பகுதியில் சுமார் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சரிவர குடிநீர் வசதி இல்லாததால் கடந்த அதிமுக ஆட்சியில் அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்விசை மோட்டாருடன் குடிநீர் கேன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது வந்தது.
கடந்த 8 மாதங்களாக மின் விசை மோட்டார் பழுது காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பகுதி மக்கள் குடிநீருக்காக இங்கும் அங்கும் அலைந்து குடிநீர் கொண்டு வருகின்றனர். மின்விசை மோட்டார் சரி செய்து குடிநீர் விநியோகம் செய்ய பல முறை நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் நகர மன்ற உறுப்பினர் இக்பால் அஹமத் தலைமையில் காஜா நகர்ப் பகுதியில் பழுதான நீர் தேக்க தொட்டி முன்பாக காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து நகராட்சி அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நகரமன்ற உறுப்பினர் இக்பால் அஹ்மதிடம் தொடர்பு கொண்டு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.