பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகை வழங்கப்படாததால் விவசாயி ஒருவர் நெற்பயிரை தீ வைத்து எரித்த சம்பவம் வேலூரில் நிகழ்ந்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள பொன்னை பகுதியை ஒட்டியுள்ளது கொண்டாரெட்டிப்பள்ளி கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயியான சிவகுமார் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு ஐ.ஆர்.50 என்ற ரக நெற்பயிரை 3 ஏக்கர் நிலத்தில் பயரிட்டுள்ளார். பயிரிடப்படும் போது பயிருக்கு மத்திய அரசின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் 1300 ரூபாய் செலுத்தி பயிர்க் காப்பீடு செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக பெய்த கனமழையில் நெற்பயிரானது சேதமடைந்தது. இதைதொடர்ந்து சிவக்குமார் கடந்த 28-10-2022 அன்று வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொண்டு எனது பயிர் மழையின் காரணமாக சேதமடைந்து விட்டது என இழப்பீடு கேட்டுள்ளார். ஆனால், தற்பொழுது வரை சேதமடைந்த பயிரை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யவில்லை, இழப்பீடு வழங்கவில்லை என நெற்பயிரை எரித்து தீக்கிரையாக்கினார்.