Skip to main content

“தமிழகத்தில் இனி ஆட்சி மாற்றமே கிடையாது!” - தேசிய தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பு தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் பேச்சு!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

 

"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது கண்டிப்பாக இருக்காது. ஏனென்றால், ஏற்கனவே அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் தன் வசதிகேற்ப தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது பாஜக" என தேசிய தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்புத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன்  கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

மேலும், "வளர்ந்த நாடுகளில் வாக்குப்பதிவு சீட்டு முறை அமலில் இருக்கும்போது, வளரும் நாடான இந்தியாவில் எதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். அனைத்துக் கட்சிகளும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்" என தேசிய தவ்ஹீத் ஜமாத் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகம், புதுவை, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட 19 மாநிலங்களைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

கூட்டத்தில் பேசிய கூட்டமைப்பு தலைவர் ஜெய்னுல் ஆபிதீன், "விவசாயம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, மத்திய அரசு இதில் மூக்கை நுழைத்து மாநில அரசினுடைய அதிகாரங்களைப் பிடுங்கி, தற்போது வலுக்கட்டாயமாக இந்தப் புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. மாநில கட்டுப்பாட்டில் இருந்தவரை விவசாயிகளுடைய அனைத்து உற்பத்திப் பொருட்களும் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் மட்டுமல்ல பொதுமக்களும் பாதிக்கப்படுவோம். இன்று 50 ரூபாய்க்குப் பெறப்படும் ஒரு கிலோ அரிசி, நாளை தனியாருக்குத் தாரை வார்க்கும்போது 500 ரூபாய்க்கு வாங்கவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவோம்.

 

மேலும் இந்தக் கூட்டத்தில், மூட நம்பிக்கை ஒழிப்பு, மூடநம்பிக்கை மீதான நம்பிக்கையை இஸ்லாமியர்களிடம் இருந்து அகற்ற வேண்டும் என்பதை தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப் போவதாக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முயற்சிசெய்து வருவதாகவும், அதன் முன்னோடி திட்டமான தேசிய குடியுரிமை பதிவு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் வாக்குச் சீட்டு மூலம் தேர்தலை நடத்துகின்றன.

 

இந்த முறையை இந்திய அரசும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் குறைந்த காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுடைய வாழ்க்கைத் தரமும் தொழிலும் முன்னேற, வட்டியில்லாத நீண்டகால கடன் வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்குக் கோரிக்கை முன்வைத்துள்ளனர். ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்றும், எரிவாயு விலையேற்றம் பொது மக்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது 

 

cnc

 

‘லவ் ஜிஹாத்’ என்ற வார்த்தை ஆபத்தானது. அதிலும் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ‘ஜிஹாத்’ என்ற வார்த்தையைக் கொச்சைப்படுத்தி, மதவெறியுடன் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றம் கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை இருப்பினும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார கும்பல் முஸ்லிம்களைக் கத்திமுனையில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லச் சொல்வதை தவ்ஹீத் ஜமாத் வன்மையாகக் கண்டிக்கிறது" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.