எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு - விழுப்புரம் எஸ்.பி., பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

raja

தமிழகத்தில் வன்முறையை தூண்டிவிட்டு, நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் செயல்படும் எச்.ராஜாவுக்கு எதிரான புகாரில் நடவடிக்கை கோரிய வழக்கில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதைத்தொடர்ந்து, வேலூர் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் வன்முறையை தூண்டிவிட்டு, சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் செயல்படும் எச்.ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் ஜெயரட்சகன் மார்ச் 6ஆம் தேதி புகார் அளித்தார்.

அதன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், ஹெச்.ராஜா மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து விழுப்புரம் எஸ்.பி, கண்டமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

H Raja high court
இதையும் படியுங்கள்
Subscribe