Skip to main content

‘உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி நிறுவனத்தில் நிரந்தர வேலை வழங்க வேண்டும்'- இயக்குனர் வ.கௌதமன் அறிக்கை!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

nlc employees incident gowdhamanan statement

 

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள 5வது அலகிலுள்ள கொதிகலன் (பாய்லர்) வெடித்ததில் அங்கு பணியாற்றிய 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர், திரைப்பட இயக்குனர் வ.கெளதமன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, "இந்திய ஒன்றிய நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையமான நெய்வேலி என்.எல்.சியில் ஏற்பட்டு வரும் தொடர் உயிர்பலிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. கடந்த மே மாதம் 5 உயிர்களை பலி வாங்கிய அதே இடத்தில், இப்போது (01.07.2020) கொதிகலன் வெடித்ததில் 7 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஒரு நிரந்தர தொழிலாளர் உட்பட 8 பேர் உயிரிழந்ததோடு 12 பேர் பலத்த காயங்களுடனும் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நவரத்னா சிறப்பைப் பெற்ற இந்த இந்திய ஒன்றிய நிறுவனம், கவனக் குறைவாக செயல்பட்டு தொடர்ந்து தமிழர்களின் உயிருடன் விளையாடி வருவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை பிய்த்தெறிந்து, நூற்றுக்கணக்கான கிராமங்களை தின்று செறித்துதான் இன்று என்.எல்.சி எனும் 'எமன்' கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்து மக்களின் வாழ்வியலை சூறையாடிவிட்டு நின்று கொண்டிருக்கிறது. காவேரியில் தண்ணீர் தர மறுத்தபோது, எங்கள் மண்ணிலிருந்து மின்சாரத்தை தர மாட்டோம் என கூறுவதற்கு அஞ்சிய தமிழக ஆட்சியாளர்கள் எம் மக்களின் உயிரை மட்டும் கொத்துக்கொத்தாய் கொதிகலன் வெடித்து கொன்று வீசப்படுவதை வேடிக்கை பார்ப்பது எப்படி நியாயமாகும். எங்கள் நிலத்தையும் கொடுத்து, உயிரையும் கொடுத்து எங்கள் மக்களை அநாதைகளாக்கவா இந்திய அரசும், தமிழக அரசும் கைகோர்த்து விளையாடுகின்றன. இறந்த ஒவ்வொரு உயிருக்கும் தமிழக அரசு மூன்று லட்சம் நிவாரணம் அறிவித்ததை வன்மையாக கண்டிக்கிறேன். படித்த பள்ளிக்கூடம், குளித்த குளம், கும்பிட்ட கோயில், குடியிருந்த வீடு, சோறிட்ட வயல் என்று அத்தனையையும் விட்டுக் கொடுத்து உயிரையும் விட்டவனுக்கு இப்படி பிச்சையிடுதல் கூட ஒருவகை வன்முறைதான். 

நிலம் கொடுத்து உயிரையும் தருபவனுக்கு நிரந்தரமில்லாத ஒப்பந்த தொழிலாளர் வேலை. கூட்டம் கூட்டமாக அள்ளிக்கொண்டு வந்த இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் சம்பந்தமில்லாத வடமாநிலத்தவருக்கு கைநிறைய சம்பளத்தோடு நிரந்தர வேலை மற்றும் சொகுசு வாழ்க்கை. முறையான பராமரிப்பின்றி, வகைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு இன்றி தொடரும் இந்த விபத்துகளும் ஒரு வகையில் பச்சை படுகொலைகள்தான். ஒவ்வொரு முறை விபத்துகள் ஏற்படுகிற போதும் குறிப்பிட்ட தொகையை வீசியெறிந்து அத்துடன் தனது கடமையை முடித்து கொள்கிறதே தவிர மேற்கொண்டு விபத்துகள் ஏற்படாமலிருக்க இரண்டு அரசுகளும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. விலை மதிப்பில்லாத தமிழர் உயிர்களை, வெறும் இயந்திரங்களாக பயன்படுத்தி வரும் என்.எல்.சி. நிறுவனம் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக ஐம்பது லட்சம் கொடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி நிறுவனத்தில நிரந்தர வேலை வழங்க வேண்டும்.  

இதற்கு மேலும் சுரங்க விரிவாக்கம் என்று கூறி மீதமுள்ள கடலூர், அரியலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களை என்.எல்.சி. என்கிற எமன் கையகப்படுத்த நினைத்தால், மாணவர்களையும் இளைஞர்களையும், எம் மக்களையும் திரட்டி மண் அதிர மாபெரும் போராட்டத்தை தமிழ்ப் பேரரசு கட்சி முன்னெடுக்கும் என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

பணிச்சுமை காரணமாக டான்சி நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

tansi company employee  lost their life due to workload

 

ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (53). இவரது மனைவி ராதா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். ரங்கசாமி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

 

கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(29.11.2023) காலையில் ரங்கசாமி பணிக்குச் சென்றார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்திருக்கிறது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை. 

 

இதையடுத்து சந்தேகமடைந்த ராதா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ள குளியல் அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ரங்கசாமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். டான்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்த தொந்தரவால்தான் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

Next Story

திருச்சி பெல் அதிகாரி பணியிட மாற்றம்; ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

trichy bhel employee transfer trichy to punjab 

 

திருச்சி பெல் (BHEL) நிறுவனத்தில் சிவில் பிரிவில் பணியாற்றி வரும் தொழிற்சங்க தலைவரும், ஐஎன்டியுசியின் பொதுச் செயலாளருமான கல்யாணகுமாரை பெல் நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருச்சியில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

 

பணியிட மாற்றம் செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பாகவே முறையான அறிவிப்பு வழங்கப்பட்டு, இங்கிருந்து பணியில் விடுவிப்பதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால், தன்னை பெல் நிர்வாகம் வேண்டும் என்றே திட்டமிட்டு பணியிட மாற்றம் செய்து பழிவாங்குவதாக கல்யாணகுமார் குற்றம் சாட்டியுள்ளார். அதனைக் கண்டித்து இன்று காலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அமலாக்க அதிகாரி அலுவலகத்தை ஐஎன்டியுசி உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கல்யாணகுமார், "நான் பெல் நிறுவனத்தை எதிர்த்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடர்ந்து உள்ளதால் என்னை பழிவாங்கும் நோக்கத்தில் பெல் நிர்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளது. எனவே இந்த தொழிலாளர் விரோதப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மத்திய அரசின் தொழிலாளர் அமலாக்க அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்துள்ளோம்" என்று கூறினார்.