கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சம்பா சாகுபடிக்கான நெல் நடவுப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் கடந்த சில நாட்களாக பொழியும் கனமழையால் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.
இந்நிலையில் கம்மாபுரம், சு.கீணணூர், கோபுலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மணல் மேட்டில் இருந்து வெளியேறுகின்ற மழைநீர், வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாத காரணத்தால் உடைப்பு ஏற்பட்டு, சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெற்பயிர்களை முற்றிலுமாக மூழ்கடித்துள்ளது. இதனைப் பார்த்த விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து நடவுப் பணிகளில் ஈடுபட்ட விவசாயிகள், தண்ணீரை வெளியேற்றும் முயற்சியிலும், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நெற்பயிர்களைச் கரிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக, மழைக்காலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்கள் என்.எல்.சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஒவ்வொரு முறையும் நாசமடைவதால் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.