Skip to main content

என்எல்சி விபத்து: ரூ 50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை- மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் வலிறுத்தல்

Published on 01/07/2020 | Edited on 02/07/2020
 NLC accident; Rs 50 lakh compensation, permanent work for a family - K Balakrishnan

 

சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், நெய்வேலி அனல் மின்நிலையத்தில் ஜூலை 1-ந்தேதி புதன்கிழமை, 2-வது அனல் மின்நிலையத்தின் 5-வது யூனிட்டில் தீவிபத்து ஏற்பட்டு பாய்லர் வெடித்து 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலே இறந்துள்ளார்கள். 17-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சென்னைக்கு மேல் சிகிச்சைகாக அழைத்து சென்றுள்ளனர். அதேபோல் கடந்த 6 மாதத்திற்கு முன் இதே இடத்தில் 6-வது யூனிட்டில் விபத்து ஏற்பட்டு 5-பேர் இறந்தனர். பல தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். கடந்த 2019-ல் நடந்த விபத்தில் ஒருவர் இறந்தார். 5-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மத்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான இந்த நெய்வேலி என்எல்சி நிறுவனம் வருடத்திற்கு ரூ1200கோடி அளவுக்கு லாபம் தரக்கூடியது. இதில் அடுத்தடுத்து நடைபெறும் விபத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது குறித்து நெய்வேலி நிறுவனம் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த விபத்து குறித்து விசாரணை செய்ததில் நெய்வேலி நிறுவனத்திற்கு பாய்லரை திருச்சியில் உள்ள பொதுதுறை நிறுவனமான பெல் நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த பாய்லர் பராமரிக்கும் பணியை அந்த நிறுவனத்திடம் கொடுப்பது இல்லை. இதற்கு மாறாக பாய்லர்களை பராமரிக்கும் பணியை தனியார் காண்ட்ராக்டர் வசம் ஒப்படைத்துள்ளனர். இது கையூட்டு வாங்கிகொண்டு, பணிகளை கொடுத்துள்ளதாக சந்தேகம் எழுகிறது.  அவர்கள் சரியான முறையில் பாய்லர்களை பராமரிக்காததால் இந்த விபத்து நடந்துள்ளது. இது எதேச்சையாக நடந்த விபத்து இல்லை. நிர்வாகத்தின் கோளாறு காரணமாகவும், நிறுவனத்தில் உள்ள அதிகாரிகளின் தவறான அணுகுமுறையால் தொடர்ந்து விபத்து நடைபெற்று உயிர் பலி ஏற்படுகிறது. ஆனால் தொடர்ந்து விபத்து நடைபெறுகிறது சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை.

இந்த விபத்தில் இறந்துபோன தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ50 லட்சம் இழப்பீடு மற்றும் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ10 லட்சம் அவர்களின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்க வேண்டும். இந்த விபத்து குறித்து ஒரு குழு உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டார். மேலும் இது விபத்து நடந்தது என்று இழப்பீடு கொடுத்துவிட்டு சென்று விடாமல் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.

காவல்துறை எந்த அளவுக்கு அத்துமீறி நடந்து கொள்கிறது என்பதற்கு சத்தான்குளம் சம்பவம் நடைமுறை உதாரணம். அந்த சம்பவத்தில் மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. பொறுப்புணர்வோடு ஒரு நீதிபதி காவல்நிலையத்தில் விசாரணையில் இருக்கும்போதே அங்கே விரும்பத்தகாத சம்பவங்கள் அங்குள்ள காவலர்களால் நிகழும்போது அது என்ன காவல் நிலையமா அல்லது சமூக விரோத கூடமா? என கேள்வி எழுப்பினார்.

தந்தை, மகன் கொலை விவகாரத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருத்து கூறியிருப்பதால் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் அனைவரையும் ஏன் கைது செய்யவில்லை,  கரோனா வைரஸ் ஊரடங்கு காலங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை பார்த்திருக்கிறோம் அப்படி உள்ள காவல் துறையில்  இப்படி நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சாத்தான்குளம் சம்பவத்தில்  காவல்துறை உயர் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதிக்கின்றனர். தமிழக முதல்வர், அமைச்சர் காப்பாற்றிவிடுவார்கள் என காவல்துறை அதிகாரிகள் நினைத்துள்ளனரா, இதற்கு தமிழக முதல்வர் சரியான பதிலை கூறவேண்டும்.

அதேபோல தமிழகத்தில் கடலூர் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணி செய்யும் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டும் அவர்கள் தொடர்ந்து பணியில் உள்ளனர். அவர்கள் மீது பெரிய அளவில் குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் பணியாற்ற அனுமதிப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே தமிழக தலைமை காவல்துறை அதிகாரி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இவருடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மூசா, மாவட்டசெயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சிதம்பரம் நகர செயலாளர் ராஜா உடன் இருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்; மீட்கும் பணியில் ஏற்பட்ட சோகம்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Labor trapped in landslide in chennai

சென்னை, கிழக்கு தாம்பரம் அருகே ஆதிநகர் பகுதி ஒன்று உள்ளது. இங்கு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் மூலம் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. பாதாள சாக்கடைக்கான பள்ளம் தோண்டி பைப்லைன் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று (16-03-24) மாலை திடீரென பள்ளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், திட்டக்குடியைச் சேர்ந்த தொழிலாளர் முருகானந்தம் என்பவர் மண் சரிவில் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், மண் சரிவில் சிக்கியிருந்த முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதில், ஜே.சி.பி வாகன உதவியுடன் தீயணைப்புத் துறையினர், முருகானந்தனை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது தலை மட்டும் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, முருகானந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தொடர் விபத்து; திடீரென சாலையில் கவிழ்ந்த லாரி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 truck overturned on the Thiruvananthapuram National Highway

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அதிக அளவிலான கனிம வளங்களை அதிக பாரத்தோடு கேரளாவுக்கு கடத்திச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிலையில், கனிம வளங்கள் திருடப்படுவதை தடுக்க பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, கனிம வள கொள்ளையை தடுக்கும் வண்ணம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கனிம வள கொள்ளையில் ஈடுபடும் லாரிகள், இதே பகுதியில் விபத்துகளிலும் அடிக்கடி சிக்கிக்க் கொள்கின்றன. இதன் காரணமாக இந்தப் பகுதிகளில் விபத்துக்கள் அதிகமாக நடக்காமலிருக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம் பெற்றது. இதனால், நாகர்கோவில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் விரிவுப்படுத்தும் பணி தொடங்கியது. அதே சமயம் இந்தப் பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க சாலைகளில் பல இடங்களில் கான்கிரீட் கட்டைகளால் ஆன சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இது அமைக்கப்பட்ட பிறகு விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சென்டர் மீடியன் அமைக்கப்பட்ட பிறகுதான் தற்போது இந்தப் பகுதியில் அதிகமாக விபத்து ஏற்பட ஆரம்பித்துள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதில் கடந்த 10 நாட்களில் மட்டுமே சுமார் 6க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மேலும் ஒரு விபத்து நடந்துள்ளது. மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி லோடு ஏதும் இல்லாமல் டாரஸ் லாரி ஒன்று சென்றுள்ளது.

அப்போது, அந்த டாரஸ் லாரி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இவ்வாறு வேகமாகச் சென்ற அந்த டாரஸ் லாரியை, வெள்ளிக்கோடு பகுதியில் உள்ள வளைவில் ஓட்டுனநர் திருப்ப முயன்றுள்ளார். ஆனால், சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த டிவைடர் சிமெண்ட் கட்டையில் என மோதியுள்ளது. உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் அந்த லாரியை அங்கேயே நிறுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது டாரஸ் லாரியை நிறுத்த ஓட்டுநர் பிரேக் பிடித்தபோது, அந்த லாரி வேகமாக புரண்டு பெரும் சத்தத்துடன் பொத்தென்று கீழே விழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.