புயல் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், பெரும் சேதங்களைத் தவிர்க்கவும் முன் எச்சரிக்கையோடு இருங்கள் என்று அரசுகளும் அதிகாரிகளும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், அதிக கிளைகள் உள்ள மரங்களின் கிளைகள், தென்னை மரங்களில் தேங்காய் மற்றும் மட்டைகளை அகற்றி தலைக்கணத்தைக் குறைக்கவும் வலியுறுத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், 'கஜா' புயலால் பெரும் சேதங்களை அடைந்ததால், கடந்த சில நாட்களாக, 'நிவர்' புயல் எச்சரிக்கையாக விவசாயிகள் தென்னை மரங்களில் மட்டைகளை அகற்றியுள்ளனர். அதேபோல பொதுமக்கள் வீடுகளின் ஓரங்களில் நின்ற மரக் கிளைகளையும் அகற்றியுள்ளனர்.
இதேபோல் தான் புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் அருகில் உள்ள பொக்கிசக்காரன்பட்டி கிராமத்தில் சுப்பையா மகன் காமராஜ் (27) என்ற இளைஞர், 'நிவர்' புயலில் இருந்து மரங்களைக் காக்க, தன் வீடு அருகே உள்ள முருங்கை மரத்தின் கிளைகளை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கிளை மேலே சென்ற உயரழுத்த மின்கம்பிகளில் பட்டு தூக்கிவீசப்பட்டார். அவரை, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தும் பயனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை எழுந்துள்ளது.