Advertisment

வீட்டின் ஓடுகளை இறக்கிய விவசாயி...! கஜா புயலில் பாதிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை!

Advertisment

'நிவர்' புயல் தமிழ்நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, தென்னை மரங்களில் மட்டைகள், தேங்காய்களை இறக்கி வருவதுடன் மா, பலா, தேக்கு போன்ற மரங்களில் கிளைகளையும் அகற்றி உள்ளனர். அதேபோல, கடைகள் ஓரங்களில் நின்ற மரங்களில் கிளைகளை அகற்றியுள்ளனர்.

கடை, வீடுகளின் கூரைகளைத் தார்ப்பாய்கள் கட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, வீட்டிற்குத்தேவையான பொருட்களையும் வாங்கிச் சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கிய கஜா புயலில், லட்சக் கணக்கான வீடுகள், கோடிக் கணக்கான மரங்கள் சேதமடைந்தது. பல வீடுகளில் ஓடுகள் காணவில்லை. இந்த நிலையில்தான், கீரமங்கலம் அருகில் உள்ள நகரம் கிராமத்தில், குமார் என்ற விவசாயி, தனது வீட்டின் மேல் போடப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் ஓடுகளையும் கீழே இறக்கி வைத்துவிட்டார்.

Advertisment

இது குறித்து விவசாயி குமார் கூறும் போது, “கஜா புயலில் எங்கள் வீட்டின் ஓடுகள் முழுமையாகக் காற்றில் பறந்து உடைந்துவிட்டது. அதன் பிறகு, கடன் வாங்கி மீண்டும் ஓடுகளைப் போட்டோம். வீட்டை இழந்த எனக்கு அரசு வீடு கேட்டு, மனு கொடுத்தும் இதுவரை கிடைக்கவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்ட என் மனைவியை வைத்துக்கொண்டு இந்த வீட்டில் இருக்க பயமாக உள்ளது. அதனால்தான் முன் எச்சரிக்கையாக, நண்பர்கள் துணையோடு ஓடுகளை இறக்கி வைத்துவிட்டேன். இனிமேலாவது எனக்கு அரசு வீடு கொடுத்தால் எதிர்வரும் காலங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்ட என் மனைவியுடன் நிம்மதியாக இருப்பேன்” என்றார்.

puthukottai nivar cyclone kaja cyclone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe