நிர்மலாதேவி வழக்கில், உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய இருவருக்கும், கடந்த 12-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஒரு நாள் முழுவதும் காத்திருந்து, பிணைக்கான பத்திரங்களை சமர்ப்பித்திருக்கின்றனர் அவ்விருவர் குடும்பத்தினர். ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே மாலை 6 மணிக்கு மேலாகிவிட்டதால், இன்று இருவரையும் மதுரை மத்திய சிறையிலிருந்து பிணையில் வெளியில் அழைத்துவர இயலாது. அதனால், நாளைதான் இருவரும் ஜாமினில் வெளிவருகின்றனர்.
உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியும் நீதிமன்ற நடைமுறைகளின் காரணமாக, ஒரு வாரம் தள்ளிப்போய்விட்டது முருகனுக்கும் கருப்பசாமிக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்திவிட்டதாக அவர்களின் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.