Advertisment

மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்தக்கூடாது. ரகசியமாக விசாரணை நடத்த வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி லியாகத் அலி முன்பு நடைபெற்றது. வழக்கு விசாரணைக்காக நிர்மலாதேவி மற்றும் கருப்பசாமி, முருகன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Advertisment

இந்த வழக்கில் ஆஜரான நிர்மலாதேவி, முருகன் தரப்பு வக்கீல்கள், இதுபோன்ற வழக்குகள் ரகசியமாக நீதிமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது பொருந்தாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர்.

இதனையடுத்து நீதிபதி லியாகத் அலி, 31 சாட்சிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்படும். இரண்டில் இருந்து 32 வரையிலான சாட்சிகளிடம் ரகசிய விசாரணையாக நடைபெறட்டும். மற்ற 114 சாட்சிகளிடமும் திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கு விசாரணை நவம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.