nirmala-devi

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், தூத்துக்குடி புனித மேரி கல்லூரி உதவி பேராசிரியை ஜெசிந்தா தமிழ்மலரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டின் பேரில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். நிர்மலாதேவியை விருதுநகரில் வைத்து சிபிசிஐடி காவல்துறையினர் 5வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர் அளித்த தகவல்களின்பேரில் நிர்மலா தேவியின் சகோதரர் ரவி, தேவாங்கர் கலைக்கல்லூரி கணிதத் துறை தலைவர் நாகராஜன், மற்றும் கல்லூரி அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது.

Advertisment

இதேபோல, நிர்மலா தேவியுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக எம்.பி.ஏ. பிரிவின் பேராசிரியர் முருகனிடமும் இன்று 2வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் நிர்மலா தேவியுடன் தொடர்புடைய மதுரை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற புத்தாக்க பயிற்சியின் போது நிர்மலாதேவியுடன் ஒரே அறையில் தங்கி இருந்த தூத்துக்குடி புனித மேரி கல்லூரி உதவி பேராசிரியை ஜெசிந்தா தமிழ்மலரை விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக புத்தாக்க பயிற்சியின்போது தான் பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தொடர்பு கொண்டு தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. எனவே அப்போது உடன் தங்கியிருந்த ஜெசிந்தா தமிழ்மலருக்கு ஏதேனும் தகவல்கள் எதுவும் தெரியுமா என விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.