Skip to main content

'இந்தியாஸ் வாட்டர் வாரியர் விருது' பெறும் முதல் தமிழன் நிமல் ராகவன்!

Published on 03/09/2022 | Edited on 03/09/2022

 

Nimal Raghavan is the first Tamilian to receive 'India's Water Warrior Award'!

 

 

இந்தியாவில் நீர் மேலாண்மை, நீர்நிலை மராமத்து பணிகளில் சிறந்து விளங்குவோர்க்கு பெட்டர் இந்தியா நிறுவனம் 'இந்தியாஸ் வாட்டர் வாரியர்' விருது வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். பல கட்ட தேர்வுகள் நடந்தது.  முதல் சுற்றில் 15 பேர் தேர்வாகி பிறகு 10 பேர், அடுத்து 5 பேர் கடைசியில் ஒருவரை  தேர்ந்தெடுக்க. வாக்கெடுப்பு மற்றும் பணிகளின் சான்றுகளை வைத்து தேர்வு செய்தனர். அந்த ஒருவர் தமிழக இளைஞரான நிமல் ராகவன் என்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாக உள்ளது.

 

விருதுக்கு தேர்வு பெற்றுள்ள தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் நாடியம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான நிமல் ராகவனை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஒரு குளத்தின் கரையில் வைத்து சந்தித்த போது, அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது.

 

''நாடியம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்து பொறியியல் படித்து பிழைப்பிற்காக வெளிநாடு சென்றேன். 2018 ல் சொந்த ஊருக்கு திரும்பிய போது கஜா புயலின் தாக்கத்தை கண்டேன். உயிரினும் மேலான எங்களின் வாழ்வாதாரமான தென்னை உள்ளிட்ட ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்து கிடப்பதைப் பார்த்து குழுவாக இணைந்து மீட்பு பணியும் நிவாரணப் பணியும் செய்தோம். பிறகு தான் நீர் மேலாண்மையை கையிலெடுக்க நினைத்து கைஃபா அமைப்புடன் இணைந்து பொதுமக்கள் பங்களிப்போடு டெல்டா மாவட்டங்களில் ஏரி, குளங்களை தூர்வாரி மீட்டெடுத்த போது பல வருடங்களுக்கு பிறகு தண்ணீரை நிரப்பி பார்த்த சந்தோசம் கிடைத்தது.

 

தொடர்ந்து பல பணிகள் செய்தோம். எங்கள் பணிகளைப் பார்த்து 'மில்கி மிஸ்ட்' நிறுவனம் ஒரு பொக்கலின் வாங்கி கொடுத்தார்கள். மிலாப் நிறுவனம் நிதி பெற்றுக் கொடுத்தார்கள். ஊர்மிளா எண்டர்பிரைசஸ் நிறுவனம் 2 பொக்கலின் கொடுத்தார்கள். இந்த ஊக்கத்தால் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கிய பணிகள் புதுக்கோட்டை, நாகை, பெரம்பலூர் என தமிழ்நாட்டில் இதுவரை 125 க்கும் மேற்பட்ட  நீர்நிலைகளை  சீரமைத்தோம். இதனால் நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது.  தொடர்ந்து உ.பி அலகாபாத்தில் சுதந்திர காலத்தில் சுற்றுலா தளமாக இருந்து சேதமடைந்து கிடந்த 'மெக்பெர்சன்' என்ற ஏரியை ராணுவத்துடன் இணைந்து சீரமைத்தோம். அடுத்து இலங்கை, சோமாலியா, யூக்வெடார் உள்பட சில நாடுகளில் உள்ள நீர்நிலைகளை சீரமைக்க இருக்கிறோம்.

 

இத்தனை பணிகளையும் செய்யும்போது பல இடையூறுகள் வந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து தண்ணீர் சேமிப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டதால் வெற்றி கிடைத்து வருகிறது. மேலும் ஏரி, குளங்களில் வெட்டப்படும் மண்ணைக் கொண்டு கரைகள் அமைப்பதுடன் எஞ்சிய மண்ணை வைத்து சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்காக நாட்டு மரங்களையும், பூ, காய், கனிகள் தரும் மரங்களையும் நட்டு குறுங்காடுகள் அமைத்திருக்கிறோம். இதனால் அழிந்து வரும் நாட்டு மர இனங்களும் பாதுகாக்கப்படுகிறது. எப்போதும் என் பணி தொடரும்'' என்றார் தன்னம்பிக்கையுடன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.