'ஒமிக்ரான்' தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24/12/2021) மதியம் 12.30 மணியளவில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளும், மருத்துவ நிபுணர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைப் போல், தமிழ்நாட்டிலும் இரவு நேர ஊரடங்கை விதிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றன.
இக்கூட்டத்திற்கு பின் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1- ல் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.