Skip to main content

நெல்லை மாவட்டத்தில் என்.ஐ.ஏ.சோதனை பரபரப்பு...

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

தடை செய்யபட்ட தீவிரவாத இயக்கங்களோடு தொடர்பு வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து நெல்லை வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளியில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டிலும் புளியங்குடி மைதீன் என்பவரது வீடு மற்றும் கடையிலும் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள்  சோதனை செய்தனர்.இதனையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காலை 7 மணி முதலே இச் சோதனை நடைபெற்று வருகிறது.
 

nia

 

 

தடைசெய்யபட்ட தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பு வைத்திருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் இராமநாதபுரம், மேலப்பாளையம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர்.இந்நிலையில் தீவிரவாதிகள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து கோவையில் சோதனை நடத்தபோது கிடைத்த தகவலின் படி நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளி பகுதியில் வளைகுடா  நாட்டில் வேலை பார்த்த திவான் முஜிபூர் என்பவரது கொச்சியில் இருந்த வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர்.இந்த சோதனையின் போது அவர் வீடு அமைந்து இருக்கும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டு இருந்தது. இதே போல் தென்காசி அருகே உள்ள புளியங்குடி பகுதியில் உள்ள மைதீன் என்பவரது இல்லம் மற்றும் அவரது பெயிண்ட் கடையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மைதீன் மற்றும் திவான் முஜீபுர் இருவரும் உறவினர்கள் ஆவர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

திவான், மைதீனின் உறவினர் என்பதால் புளியங்குடியில் தங்கி அவரது கடையில் வேலை பார்த்துவருபர். அவர் சில நாட்களுக்கு முன்பு சாட்டிலைட் போன்ற பயன்படுத்தி சிலரிடம் பேசிவந்திருக்கிறார். இந்த போன் தீவிரவாத அமைப்புகளிடமே பயன்படுத்தப்பட்டு வருவதால் அதனை இந்தியா உட்பட 14 நாடுகளில் தடை செய்துள்ளனர். தங்களிடம் பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் திவான் முஜிபுரிடம் சாட்டிலைட் போன் இருப்பது தெரியவர கொச்சி என்.ஐ.ஏ. அலுவலக, டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையிலான 12 அதிகாரிகள் 6 பேர் வீதம் வெள்ளாங்குழி மற்றும் புளியங்குடியில் இன்று காலை திவான் முஜிபுரின் அறைக்குள் புகுந்து சோதனை நடத்தியுள்ளனர்.
 

painting store

 

 

அவரிடம் வாக்கு மூலம் வாங்கிய டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் திவானை கொச்சியிலுள்ள என்.ஐ.ஏ. எஸ்.பி. முன் ஆஐராகும்படி சம்மன் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். வெள்ளாங்குளியில் உள்ள அவரது வீட்டில் சிம் கார்டுடன் கூடிய 3 செல்போன்களை கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் புழக்கமிருந்தது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது.