Skip to main content

கீழக்கரை, வாலிநோக்கத்தில் தேடுதல் வேட்டையில் என்.ஐ.ஏ.அமைப்பினர்...!!!!!

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

 

தற்பொழுது கீழக்கரை, வாலிநோக்கம் உள்ளிட்ட ஊர்களுக்குட்பட்ட, குறிப்பிட்ட ஐந்து வீடுகளில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து சோதனையிட்டு வருகின்றனர் தேசிய புலனாய்வு அமைப்பினர்.

இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பின்னர் இலங்கை அரசிற்கு உதவியாக இந்திய உளவு அமைப்புக்கள் குறிப்பாக என்.ஐ.ஏ.எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் மற்றும் ஐரோப்பிய உளவுத்துறையும் உதவி குண்டுவெடிப்பிற்கு காரணகர்த்தாக்களை தேடி வந்தது. இதனின் ஒரு பகுதியாக கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் தீவிரவாதக் குழுக்களைத் தேடி தீவிர சோதனையில் ஈடுப்பட்டது என்.ஐ.ஏ. அமைப்பு. தமிழகத்தில் ராமநாதபுரம், கோவை, மதுரை, திருவாரூர், நாகை மற்றும் சென்னையில் நடத்தப்பெற்ற சோதனையின் அடிப்படையில் தீவிரவாத குழுக்களின் பல ஆவணங்கள் சிக்கியது. 


இதேவேளையில் என்.ஐ.ஏ.அமைப்பினர்  இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக துபாயில் கைது செய்யப்பட்ட முஹ்ம்மது ஷேக் மொஹ்தீன் - மதுரை. முஹம்மது அசாருதீன் - திருவாரூர், ராஃபிக் அஹம்மது - சென்னை, முஹம்மது அப்சர் - தேனி, மொய்தீன் சீனி ஷாகுல் ஹமிது - கீழக்கரை, முஹம்மது இப்ராஹிம் - நாகப்பட்டிணம், மீரான் கனி - தேனி, குலாம் நபி ஆசாத் - பெரம்பலூர், ரஃபி அஹம்மது - ராமநாதபுரம், முன்தாப்சீர் - ராமநாதபுரம், உமர் பாஃரூக் - தஞ்சை,  பாஃரூக் - வாலிநோக்கம் - அருப்புக்கோட்டை, பைசல் ஷெரிஃப் - ராமநாதபுரம், முஹம்மது இப்ராஹிம் - திருநெல்வேலி உள்ளிட்ட 14 நபர்களை சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

இது இப்படியிருக்க, இவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத் தெருப் பகுதிகளில் உள்ள ரபி அகமது, பைசல் ஷெரீப், முன்தாப்சீர், முகைதீன் சீனி, சாகுல் அகமது ஆகியோர் இல்லங்களிலும்  வாலிநோக்கம் பகுதியில் உள்ள பாரூக் இல்லத்திலும் சோதனையிட வெள்ளிக்கிழமையன்றே ராமநாதபுரத்திற்கு வந்த  15 என்.ஐ.ஏ. அதிகாரிகள் அன்று தொழுகை நாள் என்பதால் ராமநாதபுரம் ஆயுதப்படை முகாமிற்கு அருகிலேயே தங்கியவர்கள், சனிக்கிழமையன்று உள்ளூர் போலீசாரின் துணையுடன் ஒவ்வொரு வீட்டிற்கும் 3 என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் 5 உள்ளூர் போலீசார் என்ற அடிப்படையில் தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதால் அவர் இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும்  என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

ஐ.ஜே.கே கட்சி நிர்வாகி வீட்டின் கழிவறையில் ரூ.1லட்சம் பறிமுதல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
IJK party executive house toilet Rs 1 lakh seized

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் துண்டறிக்கைகளை  தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (17.4.2024) இரவு பறிமுதல் செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சூசையப்பர் மகன் வினோத் சந்திரன்  ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவர் அந்தப் பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பணம் விநியோகிக்கக்கூடிய பெயர் பட்டியல் மற்றும் டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதி பணிகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள் 100 துண்டு பிரசுரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்தும் வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தினை பறக்கும் படை அலுவலர் செழியன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.