
தமிழகத்தில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ) சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, தேனி, திருச்சி ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்வெளியாகியுள்ளது. சென்னையில் திருவொற்றியூர், ஓட்டேரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்வெளியாகியுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நேதாஜி நகரில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மண்டல தலைவர் முகமது கைசர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் மதுரையில் நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தேனி கம்பம்மெட்டு காலனியில் உள்ள எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் அலி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த தஞ்சையை சேர்ந்த பயணி முகமது அசாப்பிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமிலும் காவல்துறையினர் திடீரென சோதனையில்ஈடுபட்டு வருகின்றனர்.
Follow Us