Skip to main content

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்; என்.ஐ.ஏ ஆய்வு

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
 NIA officials inspect in front of Guindy Governor House

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதனைப் பற்ற வைத்து கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பிற்பகல் ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசினார். உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் மொத்தமாக, பெட்ரோல் நிரப்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 14 ஆம் தேதி ரவுடி கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக காவல்துறை என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் அண்மையில் ஒப்படைத்தது.

இந்த நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒன்றரை மணி நேரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தன்று பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சில்வான் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரை புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சில்வானிடம் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறவுள்ளனர்.

சார்ந்த செய்திகள்