Skip to main content

கோவை கார் வெடிப்பு சம்பவம்; என்.ஐ.ஏ விசாரணை

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

NIA investigation of Coimbatore car blast incident

 

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். 

 

தற்பொழுது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது யுஏபிஏ (உபா) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவர் எனவும் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 5 பேருக்கும் நவம்பர் எட்டாம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்ட ஐந்து பேருமே 28 வயதிற்கு உட்பட்டவர்கள். இவர்கள் இதற்கு முன்பே என்.ஐ.ஏ விசாரணை வளையத்தில் இருந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக முபீனுக்கு கார் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட முகமது தல்கா 1998 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நவாப் கான் என்பவரின் மகன் என்பதும் நவாப் கான் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் தம்பி எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக கோவை உக்கடத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்ற நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். காரில் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் குறித்து காவல் துறையினரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் கேட்டு அறிந்து தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். ஜமேஷா முபீனின் பின்னணி குறித்தும் அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்தும் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

 

இது குறித்து கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “கார் வெடித்த சம்பவம் தொடர்பான தகவல்களை கோவையில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். என்.ஐ.ஏ தகவல்களைத் திரட்டினாலும் தற்போது வரை விசாரணை கோவை போலீசார் வசமே உள்ளது” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்