நேற்று முன்தினம் (10/08/2021) அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களிலிருந்து ரூபாய் 13.08 லட்சம் ரூபாய் மற்றும் நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள், தொழில் நிறுவனங்களின் பரிவர்த்தனை ஆவணங்கள், ரூபாய் 2 கோடிக்கான வைப்புத்தொகை ஆவணம், மாநகராட்சி தொடர்பான ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகள், முறைகேடு செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவைபறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகலஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல், வேலுமணியின் வங்கிக் கணக்கு மற்றும் வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பேமுன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.முன்னாள் அமைச்சர்கள் மீதான இந்த ரெய்டு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ‘ஊழலின் ஊற்றுக்கண்ணேமுன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்’ என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. ஊழலின் ஊற்றுக்கண்ணே முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான். விரைவில் ராஜேந்திர பாலாஜி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்'' எனக் கூறியுள்ளார்.