கடந்த ஒரு வாரக்காலமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே போன்று கேரளா மற்றும் கர்நாடகாவின் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கடந்த ஒரு சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர், குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (06.07.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.