Skip to main content

புத்தாண்டு கொண்டாட்டத்தில் உதவி இயக்குநர் கொலை... மற்றொரு உதவி இயக்குநர் கைது!

Published on 01/01/2021 | Edited on 01/01/2021

 

newyear celebration assistant director incident

 

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சின்னத்திரை உதவி இயக்குநர் ருத்ரன் கொலை செய்யப்பட்டார். 

 

கரோனா காரணமாக தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. மேலும் டிசம்பர் 31-ஆம் தேதி சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுபான பார்கள் என அனைத்து உணவகங்களும் இரவு 10.00 மணிக்கு மேல் திறந்திருக்கக் கூடாது என மாநகர காவல்துறை உத்தரவிட்டிருந்தது. அதேபோல் அனைத்து கடற்கரை சாலைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சென்னை மாநகரம் முழுவதும் நேற்று (டிசம்பர் 31) இரவு சுமார் 10,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

 

இந்நிலையில் சென்னை அருகே மாங்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சின்னத்திரை உதவி இயக்குநர்கள் நான்கு பேர் மது அருந்தி புத்தாண்டு கொண்டாடியுள்ளனர். அப்போது நான்கு பேருக்கும் போதை அதிகமான நிலையில், புகைப்பிடிக்கும் போது ஏற்பட்ட மோதலில் உதவி இயக்குநர் ருத்ரன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். 

 

இது குறித்து தகவலறிந்த மாங்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ருத்ரனை கொலை செய்த மற்றொரு சின்னத்திரை உதவி இயக்குநர் மணிகண்டனை கைது செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இதனிடையே ருத்ரனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உதவி இயக்குநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்