Skip to main content

“ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதி ரூ. 300 கோடியை மத்திய அரசு கட்டாயப்படுத்தி பெற்றுக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது..!” - பிஆர்.பாண்டியன்

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

“ONGC The news that the central government has forcibly obtained Rs. 300 crore from the company's social development fund is shocking ..! ” - P. R. Pandian

 

தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன், இன்று (22.07.2021) திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் அவர், “தமிழ்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வகையில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுமான பணிக்கு ரூபாய் 9000 கோடி திட்ட மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசின் ஜல்சக்தி துறைக்கு அனுப்பியது. அவ்வறிக்கையை ஜல்சக்தி துறை அமைச்சகம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பிவைத்துள்ளது.

 

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை சட்டவிரோதம் என அறிவித்து நிராகரித்திட வேண்டுமென தமிழ்நாடு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆணையத்திற்கு அனுப்பிவைத்திட வேண்டும்.

 

ஆணையம் கூட்டத்தில் விவாதிப்பதற்கு முன்னதாக மேகதாது அணை கட்டப்படுவதால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட இருக்கிற பேராபத்தைக் கேரள அரசிடம் எடுத்துக் கூறி தமிழ்நாடு நலன் கருதி கேரள அரசு தடுத்து நிறுத்தும் வகையில் ஆணையம் மூலம் திட்ட அறிக்கையை நிராகரிக்க நமக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேரள முதலமைச்சரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.

 

காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்திவரும் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதி ரூ. 300 கோடியை மத்திய அரசு கட்டாயப்படுத்தி பெற்றுக்கொண்டதாக வெளிவரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்நிதி முழுவதும் காவிரி டெல்டாவில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு விளக்கம் கோர வேண்டும். பாராளுமன்றத்தில் இச்செயல் குறித்து விளக்கம் கேட்டு உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'காவிரி நீர் எங்கே...? மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்ட பி.ஆர்.பாண்டியன் குண்டுக்கட்டாக கைது

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

'Where is Cauvery water...? BR Pandian who shouted slogans condemning the central and state government was arrested

 

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்ப்பு நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என தஞ்சாவூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் சென்னை மெரினா சாலையில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். 'கர்நாடக அரசிடம் இருந்து நீரை பெற்றுத்தராத மத்திய அரசையும், வேடிக்கை பார்க்கும் மாநில அரசையும் கண்டிக்கிறேன்' என கோஷமிட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்ததால் போலீசாருக்கும் பி.ஆர்.பாண்டியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியனும், அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகியும் தொடர்ந்து குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

 

 

 

Next Story

முல்லைப் பெரியாறு அணை கட்டுமானத்தில் ஈடுபட்ட மறைந்த டி.ஐ.ஜி.யின் குடும்பம் - பி.ஆர்.பாண்டியன்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

B.R. Pandian condoles the demise of DIG Vijayakumar

 

“தனது மூதாதையர் முல்லைப் பெரியாறு அணை கட்டுவதில் ஈடுபட்டதை டிஐஜி விஜயகுமார் அவ்வப்போது என்னிடத்தில் நினைவு கூறுவார்” என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

கோவை டிஐஜி விஜயகுமார் இறப்பு குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காவல்துறையில் கோவை சரக டிஐஜியாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மிகச் சிறப்பாகவும் நேர்மையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் துணிவோடும் செயல்படும் பண்புமிக்கவர். விளம்பரம் இல்லாமல் தன்னடக்கத்துடன் அனைவரிடத்திலும் சிரித்த முகத்துடன் பணிவுடன் பழகும் உயர்ந்த மனம் கொண்டவர்.

 

தேனி மாவட்டத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தனது மூதாதையர் முல்லைப் பெரியாறு அணை கட்டுவதில் ஈடுபட்டதை அவ்வப்போது என்னிடத்தில் நினைவு கூறுவார். தேனி மாவட்ட விவசாயிகள் பிரச்சினைகளுக்காக நான் தேனி பகுதி சென்று திரும்பும்போதெல்லாம் பிரச்சனைகள் குறித்து என்னோடு தொலைபேசியில் விவாதிப்பார். தான் பிறந்த மண்ணின் மீதும் முல்லைப் பெரியாறு அணை மீதும் அளவற்ற மோகம் கொண்டவர். 

 

இரண்டு முறை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு மிகச்சிறந்த காவல்துறை அதிகாரி என்கிற புகழை அனைவரிடத்திலும் பெற்றவர். இவரது மறைவு காவல் துறையில்  பேரிழப்பாகும். அதுமட்டுமின்றி காவல்துறையில் காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் அடிமட்ட காவலர்கள் துவங்கி உயர்மட்ட அதிகாரிகள் வரையிலும் தொடர்வதை தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு இவரது மரணம் வழிகாட்டுதலாக அமையும் என நான் எதிர்பார்க்கிறேன். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.