Skip to main content

போதை மருந்தால் மாணவன் இறந்தாரா? சடலத்தைத் தோண்டி எடுத்து பரிசோதனை!

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

new twist in the case of the student passed away Salem

 

சேலத்தில், போதை மருந்து செலுத்திக் கொண்டதால் 18 வயது பள்ளி மாணவன் இறந்தாரா என்ற சந்தேகம் கிளம்பியதால், புதைக்கப்பட்ட  சடலத்தைத் தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்யப்பட்டது.    

 

சேலம் மணியனூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம். வெள்ளிப்பட்டறைத் தொழிலாளி. இவருடைய மகன் கிரி (18). அண்மையில், பிளஸ்2  பொதுத்தேர்வு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். ஏப். 7ம் தேதி, லைன்மேடு பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்குச் சென்ற அவர், பின்னர்  வீடு திரும்பும்போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கிரி உயிரிழந்து விட்டதாக  தெரிவித்தனர். 

 

இதையடுத்து சீலநாயக்கன்பட்டியில் உள்ள இடுகாட்டில் மகனின் சடலத்தை பெற்றோர் அடக்கம் செய்தனர். இந்நிலையில் கிரியின் தந்தை மாணிக்கம், தன் மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக திடீரென்று அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில்  புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறை உதவி ஆணையர் அசோகன், ஆய்வாளர் சந்திரகலா ஆகியோர் விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில் கிரி மீது கஞ்சா, கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அவனுடைய பெற்றோர் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதும், தாய் வீட்டில் கிரி வசித்து வந்ததும் தெரிய வந்தது.     கடந்த ஓராண்டாக அவர் மஞ்சள் காமாலைக்கு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, போதை ஊசி போட்டுக் கொண்டதால்தான் கிரி இறந்தார் என்றும் சிலர் சந்தேகம் கிளப்பி உள்ளனர். 

 

இதையடுத்து மாணவனின் சடலத்தைத் தோண்டி எடுத்து, வட்டாட்சியர் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 9) உடற்கூராய்வு  செய்யப்பட்டது. முக்கிய உடல் உறுப்புகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. முதல்கட்ட உடற்கூராய்வில் கிரியின் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. கூராய்வுக்குப் பிறகு மாணவனின் சடலம், தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர், அதே இடத்திலேயே மீண்டும் சடலத்தைப் புதைத்தார். அறிவியல் பகுப்பாய்வுக்கூட அறிக்கை கிடைத்த பிறகே, மாணவனின் மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என காவல்துறை தரப்பில்  கூறப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.