New technique in ration rice smuggling!

Advertisment

திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட வழங்கல் அலுவலருக்கு நேற்று இரவு, லால்குடி சிவன் கோயில் பகுதியில் இருக்கும் ஒரு சிமெண்ட் விற்பனை கடையில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக இரகசியத் தகவல் கிடைத்தது.

அந்தத் தகவல் அடிப்படையில், லால்குடி வட்ட வழங்கல் அலுவலர் விஜய், தனி வருவாய் ஆய்வாளர் இளவரசி உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடியாக அங்கு சென்றனர். அதிகாரிகள் வருவதைக் கண்ட கடை உரிமையாளர் கீர்த்திவாசன், லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேரும் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்ததை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

அதனைத் தொடர்ந்து சிமெண்ட் கடையை அதிகாரிகள் சோதனையிட்டதில் சிமெண்ட் கடை என்ற பெயரில் ரேஷன் அரிசியை அரைத்து மூட்டை மூட்டையாக கடத்தப்படுவது தெரியவந்தது. கடத்த முயன்ற லாரியில் இருந்த 513 ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் 1 கோதுமை மூட்டை உள்ளிட்ட 31.806 டன் கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தல் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisment

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் லால்குடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு வருகிறது. அதிலும் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் ரேஷன் அரிசி மூட்டைகள் மட்டுமே பறிமுதல் செய்கின்றனர். ரேஷன் அரிசியை கடத்துபவர்கள் கைது செய்யப்படுவதில்லை. மேலும் இதுபோன்ற ரேஷன் அரிசி கடத்தலுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் உறுதுணையாக இருக்கின்றனர்’ என வேதனையுடன் தெரிவித்தனர்.