தமிழகத்தில் கரோனா பரவலை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகள் இன்று (10.04.2021) அமலுக்கு வந்தன.
தமிழகத்தில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை. கோயில் உட்பட வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். திருமண நிகழ்ச்சிகள் உட்பட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் வரை பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை. வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை. வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளும், ஆட்டோவில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி என்பன போன்ற புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமன்செய்ய கூடுதலாக 400 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம், கேளம்பாக்கம், வேளச்சேரி, ஆவடி ஆகிய இடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உணவகங்களில் 50% இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் உணவு அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேளிக்கை விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவர் போன்ற கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன.