Advertisment

வைகோ மகனுக்கு ம.தி.மு.க.வில் புதிய பொறுப்பு!

New responsibility for Vaiko's son in MDMK!

சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான தாயகத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தலைமையில் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (20/10/2021) நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment

கூட்டத்தில் கட்சியில் துரை வையாபுரிக்குப் பொறுப்பு வழங்குவது, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Advertisment

செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., "ம.தி.மு.க.வின் தலைமைக் கழக செயலாளராகத்துரை வையாபுரி நியமிக்கப்பட்டுள்ளார். 106 வாக்குகளில் துரை வையாபுரிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என 104 வாக்குகள் கிடைத்துள்ளன. மாவட்டச் செயலாளர்களிடம் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் முடிவு செய்யப்பட்டது. துரை வையாபுரி நியமனத்தில் வாரிசு அரசியல் இல்லை. தொண்டர்கள் விருப்பப்படி துரை வையாபுரி ம.தி.மு.க. தலைமைக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். துரை வையாபுரி மக்கள் பணியாற்றினார்; அதனால் நிர்வாகிகள் அவரை கட்சிப் பணியாற்ற அழைத்தனர். நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன். இன்று கூட வாலிபால் விளையாடுவேன். துரை வையாபுரி எடுத்திருக்கிற பணியில் வெற்றி பெறுவார் என நம்புகிறேன். பொது வாழ்வுக்கு தேவையான அத்தனை குணாதிசயங்களும் அவருக்கு உள்ளது. அவைத் தலைவர் கூட்டத்திற்கு வரவில்லை; அவர் தலைமையில் கூட்டம் நடத்த அழைக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.

ம.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளராக துரை வையாபுரி பொறுப்பேற்றப் பின் வரும் அக்டோபர் 25- ஆம் தேதி அன்று பெரியார் மற்றும் அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து, அன்றைய தினமே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கும் அவர், வாழ்த்துப் பெறுகிறார்.

vaiko mdmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe