Skip to main content

பவானி அணை நீர் திறப்பில் புதிய நடைமுறை - போராட்டத்தில் விவசாயிகள்

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

New procedure in opening water...! - Farmers in struggle

 

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் உள்ள பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காளிங்கராயன் மற்றும் கீழ்பவானி என மூன்று வாய்க்கால்களில் விவசாயம், கால்நடை மற்றும் குடிநீர் தேவைகளுக்காக முறை வைத்து நீர் திறந்து விடுவது வழக்கம். இதில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு விவசாயம் நடக்கிற கீழ்பவானி வாய்க்கால் தான் பிரதானமானது.

 

தற்போது கீழ்பவானி ஆயக்கட்டில் பொதுப் பணித்துறையினர் முதல் முறையாக முறை வைத்து நீர் விடும்முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதை கண்டித்து ஏராளமான விவசாயிகள் விவசாய சங்க தலைவர்கள் ரவி, துளசி மணி சுதந்திரராசு, செங்கோட்டையன் தலைமையில் ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணனிடம் மனு கொடுத்தனர். 

 

இது குறித்து அவர்கள் கூறும் போது, “கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி கீழ்பவானி அணையிலிருந்து கீழ்பவானி ஆயக்கட்டில் உள்ள 1.035 லட்சம் ஏக்கர் நஞ்சை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அரசு வெளியிட்ட உத்தரவின் படி அடுத்த 120 நாட்களுக்கு தடையின்றி நீர் விடப்படும். ஆனால் தற்போது அதிகாரிகள் வாரத்தில் ஒரு நாள் ஒவ்வொரு கிளை வாய்க்காலிலும் நீர் விடுவதை நிறுத்துகின்றனர். 

 

கடந்த 30 நாட்களில் நெல் நாற்று தயார் செய்யப்பட்டு தற்போது நடவு பணிகள் துவங்கியுள்ளன. நடவு பணியின் போது நீர் நிறுத்தப்படுவதால், நெல் நடவு மற்றும் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும் இதை குறிப்பிட்டு மனு அளித்தோம். ஆனால், அதிகாரிகள் கால்வாயில் அதிக நீர்க்கசிவு இருப்பதால் முறை வைத்து நீர் விடுவதாக கூறுகின்றனர். இதன் மூலம் கால்வாயில் கடைமடை பகுதிக்கு நீர் செல்லும் என்றும் தெரிவிக்கின்றனர். கடந்த 70 ஆண்டுகளாக இந்த நடைமுறை இல்லை இதை கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை அமலாக்க அதிகாரிகள் செய்யும் தந்திரமாக கருதுகிறோம். 

 

அணையில் மொத்தம் உள்ள 105 அடியில் 102 அடிக்கு தண்ணீர் உள்ளது. வழக்கமாக 2300 கன அடி நீர் பிரதான வாய்க்காலில் திறந்து விடப்படும். ஆனால், இப்பொழுது அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் விடுகிறார்கள். முறை நீர் பாசனம் விவசாயிகளுக்கு உதவுவதாக கூறுகிறார்கள். ஆனால், ஒருமுறை ஒரு கிளை வாய்க்காலில் நீர் நிறுத்தப்பட்டால் அந்த கிளை வாய்க்கால் உள்ள கடை மடைப்பகுதிக்கு தண்ணீர் சென்ற சேர இரண்டு நாட்களாகும். ஆயக்கட்டில் தொண்ணூறு சதவீத அளவிற்கு நெல் சாகுபடி தற்பொழுது செய்யப்படுகிறது. புதிய நடைமுறையால் அது முற்றிலும் பாதிக்கும். எனவே இதை எதிர்க்கிறோம். இது சம்பந்தமாக வரும் 30-ஆம் தேதி ஈரோடு கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ள வேளாண் குறை தீர்க்கும் கூட்டத்தில் பேச இருக்கிறோம். அடுத்த கட்ட போராட்டத்தையும் நடத்த இருக்கிறோம்”  என்று அவர்கள் கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.