Skip to main content

கிராம நீர்நிலைகளை உயர்த்த புதுமண தம்பதிகள் கொடுத்த கல்யாணப் பரிசு!

Published on 01/09/2019 | Edited on 01/09/2019

திருமணத்தின் போது மணமகள், மணமகனுக்கு உறவினர்களும், நண்பர்களும் மேடையில் வைத்து மோதிரம் போடுவது, பரிசுகள் கொடுப்பது வழக்கம். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக திருணம் செய்யும் தம்பதிகள் கிராம நீர்நிலைகளை உயர்த்த கல்யாணப் பரிசு கொடுத்து வருகிறார்கள்.


புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி, இந்த கிராமம் ஒரு முழு விவசாய கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் முப்போகம் விளைந்ததால், அந்த ஊர் விவசாயிகள் அடுத்த ஊருக்கு கூலி வேலைக்கு செல்லமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தங்களின் சொந்த நிலத்தில் பாடுபட்டு விவசாயம் செய்து வளர்ந்தனர். குழந்தைகளை வளர்த்து படிக்க வைத்தனர். அப்படியான கிராமத்தில் தான் படிப்படியாக தண்ணீர் குறைந்தது. 


அதனால் விவசாயமும் குறைந்தது. கடந்த சில ஆண்டுகளாக 1500 அடிக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்த ஒரு சில விவசாயிகளின் நிலங்களில் மட்டும் விவசாயம் நடக்கிறது. இந்த கிராமத்தில் குடிக்க கூட தண்ணீர் இல்லை. அந்த 1500 அடி ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் குடிக்க நினைத்தால், அந்த தண்ணீரில் அமிலங்கள் கலந்து வருவதால், அதை குடிக்க முடியவில்லை. விவசாயம் செய்து படித்த இளைஞர்கள் பிழைப்புத் தேடி வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. காலம் முழுவதும் வயலில் உழைத்த விவசாயிகள் செய்வதறியாது முடங்கிக் கிடக்கிறார்கள். 

NEW MARRIED COUPLE



இதற்கு காரணம் தண்ணீர் இல்லை. இந்த நிலை ஏன் வந்தது? கிராமத்தில் உள்ள இளைஞர்கள் இணைந்தார்கள்.. கிராமத்தில் பல வருடங்களாக பராமரிக்கப்படாமல் உள்ள நீர்நிலைகளை மராமத்து செய்து நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரி குளங்களில் தண்ணீரை சேமித்தால் மட்டுமே நிலத்தடி நீரை மேலே உயர்த்த முடியும். இந்த நிலையிலும் நாம் அமைதியாக இருந்துவிட்டால், ஊரை காலி செய்துவிட்டு வெளியூர்களுக்கு செல்ல வேண்டியது தான் என்று பேசினார்கள். இதனால் "மறமடக்கி மக்கள் செயல் இயக்கம்" உருவாக்கப்பட்டது. தங்களின் சொந்த செலவில் கிராம மக்களுடன் இணைந்து முதல்கட்ட நீர்நிலை சீரமைப்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.


இந்த நிலையில் தான் கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, செரியலூர் போன்ற ஊர்களில் இளைஞர்களின் பணிக்கு நன்கொடைகள் வழங்குவதைப் போல மறமடக்கியிலும் தன்னார்வலர்கள் நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.
 

அதன் தொடர்ச்சியாக இன்று மறமடக்கியில் அன்புமணி – சுதித்ரா திருமணம் நடந்தது. மணமக்களுக்கு பலரும் பரிசுகள் வழங்கிக் கொண்டிருந்த நேரத்தில் மணமக்கள் ரூ. 5001 பணம் வைக்கப்பட்டிருந்த கவரை நீர்நிலை சீரமைக்கும் குழுவினரை அழைத்து கல்யாணப் பரிசாக கொடுத்தனர். இதேபோல் கடந்த மாதம் கொத்தமங்கலத்தில் ஒரு தம்பதி மணமேடையில் வைத்து கல்யாணப் பரிசாக நீர்நிலை சீரமைக்க நிதி கொடுத்தனர்.


தண்ணீரின் அவசியத்தை உணர்ந்த இளைஞர்கள் இப்படி கல்யாணப் பரிசுகளை மணமக்கள் கிராம வளர்ச்சிக்காக வழங்கி வருவதும், தங்கள் குழந்தைகளின் பிறந்த நாளை நீர்நிலைகளில் கொண்டாடி மரக்கன்று நட்டு நீர்நிலை சீரமைப்பிற்கு நிதி வழங்குவதும் வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. இந்த பழக்கத்தால் கிராமங்கள் வளர்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை. இதே போன்று ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் முயன்றால் நீர்நிலைகளை உயர்த்தலாம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.