Skip to main content

ஒரே தறியில் இரண்டு நாடாக்களை நெய்யும் தறியை கண்டுபிடித்த மாணவிகள்.... 

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

ஒரே தறியில் இரண்டு நாடாக்களை போட்டு நெசவு நெய்யும் தறியை கண்டுபிடித்த சின்னாளபட்டி சேரன் பள்ளி  மாணவிகள் ஐந்து பேர் நாளைய விஞ்ஞானிகளாக தேர்வு பெற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பைபாஸ் சாலையில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியர்கள் ஒவ்வொரு வருடமும் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து பரிசுகளை பெற்று வருகின்றனர். கடந்த வருடம் இயற்கை சூழலுக்கு ஆபத்து விளைவிக்காமல் குறைந்த மின்செலவில் செயல்படும் குளிர்சாதனப் பெட்டியை கண்டுபிடித்து பரிசு பெற்றனர்.
 

new invention found by school girls


இவ்வருடம் திஇந்து தமிழ் நாளிதழும், வேலூர் விஐடி பல்கலைக்கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேசிய ஆராய்ச்சிமன்றம் மதுரையில் இணைந்து நடத்திய மண்டல அளவிலான நாளைய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சியில் சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு பெற்றனர்.

அதன்பின்பு வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, இராணுவ விஞ்ஞானி டில்லிபாபு தலைமையில் நடைபெற்ற தமிழக அளவிலான நாளைய விஞ்ஞானிகள் நிகழ்ச்சியில் சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் எம்.சுஜா, ஆர்.திவ்யதர்சினி, ஜி.சரயுதேவி, பி.சசக்திஐஸ்வர்யா, எம்.தர்ஷினிஸ்ரீ ஆகிய ஐந்து பேர் கண்டுபிடித்த ஒரே தறியில் இரண்டு நாடாக்களை போட்டு லிவர் மூலம் இரட்டை நாடாக்களை கொண்டு விரைவாக நெசவு நெய்யும் தறியை கண்டுபிடித்ததற்காக பாராட்டும், பதக்கமும், ரொக்கப் பரிசும் பெற்றனர்.

இதுகுறித்து நாளை விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவிகளில் எம்.சுஜா கூறுகையில், "கடந்த 2017ம் வருடம் நாங்கள் 9ம் வகுப்பு படித்த போது இத்தறியை கண்டுபிடித்தோம். இரட்டைநாடாவை செயல்படுத்துவதற்கான முறைகளில் சிறிய குளறுபடி இருந்தது. அதன்பின்பு நாங்கள் இரண்டு வருடம் கழித்து நெசவாளர்கள் நெய்யும் தறிக்கூடங்களுக்கு சென்று ஆராய்ந்து அவர்களுக்கு எளிய முறையில் சிரமமில்லாமல் விரைவாக பட்டு மற்றும் கைத்தறி புட்டா பருத்தி சேலைகளை நெய்வதற்கு இந்த சிறப்பு தறியை கண்டுபிடித்தோம்.


மண்டல அளவிலான போட்டியில் தேர்வு பெற்ற பின்பு வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான நாளை விஞ்ஞானிகள் போட்டியில் பரிசும், பாராட்டு சான்றிதழும் பெற்றோம். எங்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக உறுதுணையாக இருந்த எங்கள் பள்ளி முதல்வர் என்.திலகம் அவர்களுக்கும், எங்கள் பள்ளி ஆசிரியையும், எங்களது வழிகாட்டியுமான ஆர்.பாண்டிச்செல்வி அவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சின்னாளபட்டியில் உள்ள நெசவாளர்களின் குறையை தீர்ப்பதற்காக இந்த சிறப்பு இரட்டைநாடா தறியை நாங்கள் கண்டுபிடித்தோம். இதன்மூலம் அவர்கள் நெசவு நெய்தால் ஐந்து நாட்களுக்கு ஒரு பட்டுசேலையை நெய்த நெசவாளர்கள் மூன்று நாட்களில் ஒரு பட்டுசேலையை அவர்களால் தயாரிக்க முடியும். இதுதவிர சேலையில் எவ்வளவு புட்டாக்கள் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்" என்றனர்.

தாங்கள் படிக்கின்ற பள்ளிக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஐந்து மாணவிகள் கண்டுபிடித்த இந்த இரட்டை நாடா தறியை தமிழக கைத்தறி நெசவாளர்கள் மனதார பாராட்டி வரவேற்றுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக ரோட் ஷோவில் விதிமீறல்; கோவையில் எழுந்த சர்ச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Violation at BJP road show; Controversy in Coimbatore

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோயம்புத்தூர் வந்திருந்த பிரதமர் மோடி ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நடைபெற கலந்துகொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தற்பொழுது கூட்டணியில் இணைந்திருக்கும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குற்றச்சாட்டுக்கு காரணமாகியது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Next Story

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்; பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Tragedy happened to the school student for Head-on collision vehicles

திருச்சி, மாவட்டம் சோமரசம்பேட்டை போசம்பட்டி அருகேயுள்ள நரியன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கிஷோர் (14). இவர் கரூர் மாவட்டம், ஆர்.டி.மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி இரவு, கிஷோர் தனது வீட்டிலிருந்து வியாழன்மேட்டில் உள்ள மளிகை கடைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். 

அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனமும், கிஷோர் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில், படுகாயமடைந்த கிஷோர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், பள்ளி மாணவன் கிஷோரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த விபத்தில், கிஷோர் வாகனம் மீது மோதிய, எட்டரை நடராஜபுரத்தை சேர்ந்த தர்மராஜ் (40) மற்றும் அவருடன் வாகனத்தில் அமர்ந்து வந்த கிருஷ்ணராஜன் ஆகிய இருவரும் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த சோமரசம்பேட்டை காவல்துறையினர், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 9ஆம் வகுப்பு மாணவன், விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.