Skip to main content

தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் - சீமான்

Published on 05/08/2020 | Edited on 05/08/2020
Seeman

 

 

புதிய கல்விக்கொள்கைக்கெதிராக, தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையிலிருக்கும் தற்காலத்தில் நிலவும் அசாதாரணச்சூழலைத் தனக்கு தற்பயனாக்க முனையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு பன்முகத்தன்மை எனும் இந்நாட்டின் தனித்துவத்தை சிதைத்தழிக்கும் சதிச்செயலை பெரும் முனைப்போடு செயல்படுத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மத்தியிலே அதிகாரத்தை குவிப்பதையும், தேசிய இனங்களின் தனித்த அடையாளங்களை மறைத்து, ஒற்றைமயப்படுத்துவதையும் வீரியமாக செய்து எதேச்சதிகாரப்போக்கை கட்டவிழ்த்துவிடும் பாசிச செயல்பாட்டின் நீட்சியாக நாடு முழுமைக்கும் தேசியக்கல்விக்கொள்கை எனும் பெயரில் காவிக்கொள்கையை நடைமுறைப்படுத்த முனைவது இந்தியாவின் இறையாண்மையையே தகர்க்கும் பேராபத்தாகும்.

 

3,5,8,10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள், எல்லாவித பட்டப்படிப்புக்கும் நாடு முழுமைக்கும் நுழைவுத்தேர்வுகள் என்று வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் தேர்வறிவிப்புகள் மாணவர்களை அச்சுறுத்தி, அவர்களது தனித்திறன்களை மலடாக்கும் வேலைதானே ஒழிய, அவர்களை ஆளுமைகளாக வளர்த்தெடுக்கும் செயலல்ல; இது அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்திலிருந்து முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வரும் இளந்தளிர்களை உயர்கல்வியிலிருந்து வெளியேற்றி இடை நிற்றலுக்கு வழிவகுக்கும் கொடுஞ்செயலாகும்.

 

ஏற்கனவே, நீட் தேர்வைக் கொண்டு வந்து வந்து ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவை கானல் நீராக்கியது போல, தற்போது கலை, அறிவியல் மாணவர்களுக்கும் பொது நுழைவுத்தேர்வைக் கொண்டு வருவது கிராமத்து, அடித்தட்டு மாணவர்களின் உயர்கல்விக்கு உலை வைக்கும் கயமைத்தனமாகும்.

 

மொழிச்சிறுபான்மையினருக்குக்கூட அவர்களது தாய்மொழியில்தான் பயிற்றுவிக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்புச்சாசனம் கூறுகிறபோது, ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி எனும் அறிவிப்பு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. அத்தோடு, மும்மொழிக்கொள்கை எனும் பெயரில் எதற்கு பயன்தரா சமற்கிருத மொழியைத் திணிக்க முற்படுவது கல்வியை ஆரியமயப்படுத்தும் வேலையின்றி வேறில்லை. விருப்ப மொழி எனும் பெயரில் உள் நுழைக்கப்படும் சமஸ்கிருதம் நாளையே கட்டாய மொழியாக மாற்றப்பாட்டாலும் அதில் எவ்வித வியப்புக்கும் இடமில்லை.

 

ஒருபுறம், கல்விக்காக 6 விழுக்காடு நிதி ஒதுக்கீடு என அறிவித்துவிட்டு மறுபுறம் கல்லூரிகளுக்கு தரத்தின் அடிப்படையில் நிதியுதவி என்பதும், 5,000 மாணவர்களுக்கு மேலுள்ள கல்லூரிகள் மட்டுமே தொடர்ந்து செயல்பட அனுமதி என்பதும் இராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட தமிழகத்தின் இருண்டக்காலத்தை நினைவுபடுத்துகிறது.

 

மாநில அரசுகள் தரும் நிதியில் செயல்படும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க பிரதமர் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு உருவாக்கப்படும் என்பதும், பல்கலைக்கழக துணைவேந்தர்களை மத்திய அரசே நேரடியாக நியமிக்கும் என்பதும் மாநில அரசுகளின் இறையாண்மை மீது தொடுக்கப்படும் பெருந்தாக்குதலாகும். மாநிலப்பட்டியலிலிருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு தாரைவார்த்ததன் விளைவாக பல்வேறு சிக்கல்களை மாநிலங்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் இப்புதிய கல்விக்கொள்கை என்பது கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மொத்தமாய் மத்தியப்பட்டியலுக்கு கொண்டுசெல்வதற்கான தொடக்க நிலைப்பணிகளே.

 

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே மதிய உணவு வழங்கப்படும் என்பதும், மதிப்பெண்கள் அடிப்படையிலேயே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்பதும் சமூகநீதியின் மீது விழுந்த மற்றுமொரு பேரிடியாகும். இது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வியை முற்றாக பறிக்கும் வேலைத்திட்டமே!

 

பல்வேறு மாநிலங்களில் வாழும் பல தேசிய இனங்கள் பலதரப்பட்ட பாடத்திட்டங்களைப் பின்பற்றும்போது ஒற்றைத்தேர்வு முறை எப்படிச் சாத்தியம் எனும் கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுவதால், தற்போது பாடத்திட்டத்தையும் ஒரே மாதிரியாக்க இக்கல்விக்கொள்கையில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒரே பாடத்திட்டத்திலும் அறிவியலுக்கு புறம்பான ஆரியத்துவக் கதைகளையும், மூட நம்பிக்கைகளை வளர்க்கும் புராண, இதிகாச புரட்டுகளையும் வலிந்து திணிக்கப்பட வாய்ப்பமைத்திருக்கிறது இக்கல்விக்கொள்கை. ஏற்கனவே, வேலுநாச்சியாருக்கு பதிலாக ஜான்சி ராணியையும், அழகு முத்துக்கோனுக்கு பதிலாக மராத்திய சிவாஜியையும் படித்துக்கொண்டிருக்கும் நிலையில் தமிழின வரலாறு இன்னும் இருட்டடிப்பு செய்யப்படும்.

 

மொத்தத்தில், இப்புதிய கல்விக்கொள்கையானது மனுநீதியின் பெயரால் ஆண்டாண்டு காலமாக கல்வி மறுக்கப்பட்டு வந்த பூர்வக்குடிகளுக்கு கல்வி கிடைப்பதை தடுக்க முனையும் குலக்கல்வியை நவீன வடிவத்தில் உட்புகுத்தும் வர்ணாசிரமச்சூழ்ச்சியின் மறுவடிவமேயாகும்.

 

கல்வித்தரத்தில் முன்னேறியுள்ள உலகின் முன்னணி நாடுகள் யாவும் 6 வயதிலேதான் குழந்தைகளின் கற்றலைத் தொடங்கும் நிலையில், புதிய கல்விக்கொள்கையின் மூலம் 3 வயது குழந்தைகளையே கட்டமைக்கப்பட்ட கல்வித்திட்டத்திற்குள் கொண்டுவருவது என்பது அவர்களது தனித்திறனை சிதைக்கும் கொடுங்கோன்மையாகும். மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து, அவர்களை விளையாட்டு, இசை, ஓவியம் போன்ற நுண்கலைகளில் தலைச்சிறந்த தகைமையாளர்களாக வளர்த்து, வார்த்தெடுக்காது; ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்களைக் கல்வியைவிட்டே அப்புறப்படுத்தும் வேலையைச் செய்திட முனைவதும், தொழிற்கல்வி எனும் பெயரில் தந்தையின் தொழிலையே தானும் செய்யும் வகையில் அதை நோக்கி மாணவர்களை நகர்த்துவதுமே இப்புதிய கல்விக்கொள்கையின் நோக்கமாக இருப்பது வெட்ட வெளிச்சமாகிறது.

 

மேலும், கல்வித்துறையின் ஒரு அங்கமான தேர்வுத்துறையினைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வாசல் திறந்துவிடுவது ஊழலுக்கும், இலஞ்சத்துக்கும், முறைகேடுகளுக்குமே வழிவகுக்கும். பெண்களுக்கான கல்வி முன்னேற்றத்தை பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லாததும் இப்புதிய கல்விக்கொள்கை நம்மைப் பின்னோக்கி இட்டுச்செல்லும் என்பதற்கான மற்றுமொரு சான்றாகும். ஆகவே, அதிக நிதி ஒதுக்கீடு, தொழிற்கல்வி, ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழிவழிக்கல்வி என்பவையெல்லாம் நம்மை மடைமாற்றி மயக்க முனையும் பாஜகவின் வழமையான திசைதிருப்பல்களே அன்றி, உண்மையான நோக்கத்தோடு செய்யப்பட்டவை அல்ல. ஆகவே, சிற்சில நன்மைகள் இருப்பதாய் நம்பி இப்புதிய கல்விக்கொள்கையை ஏற்றால் நாளைய நம் தலைமுறையே மொத்தமாய் பாஜகவின் வஞ்சக வலையில் சிக்க நேரிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பலதரப்பட்ட தேசிய இனங்கள் சங்கமித்து வாழும் இந்திய ஒன்றியத்தின் கல்வி முறையை ஒரே குழுவை வைத்து முடிவுசெய்து, ஒரே பாடத்திட்டத்தை அவர்கள் மீது திணிக்க முற்படுவது தேசிய இனங்களின் தனித்தன்மை மீது கல்லெறியும் போக்காகும்.

 

புதிய கல்விக்கொள்கையின் வாயிலாக நிகழும் மொழித் திணிப்பினை தமிழக அரசு எதிர்ப்பது வரவேற்கத்தக்கதென்றாலும், அதுவே போதுமானதல்ல. நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் தாய்மொழி வழி கற்றல் எனும் ஒரு மொழி கொள்கையே சரியான கல்விக்கொள்கை. அதற்கு நேர்மாறாக மும்மொழிக்கொள்கையைத் திணித்து மாநிலத்தன்னாட்சிக்கு பங்கம் விளைத்திடும் இப்புதிய கல்விக்கொள்கையை மொத்தமாய் தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது.

 

ஆகவே, தமிழக அரசு இப்புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக உடனடியாக தமிழக அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்