Skip to main content

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வெடித்த புதிய சர்ச்சை! 7 ஆயுதப்படை போலீஸார் சஸ்பெண்ட்! 

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

New controversy erupts in Pollachi  case 7 Armed Police Suspended!
                                                     நீதிமன்ற வளாகம் 

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளை சிறைக்கு அழைத்து வரும்போது, நடுவழியில் அவர்களின் உறவினர்களை சந்திக்க வைத்த சம்பவத்தில் சேலம் ஆயுதப்படை எஸ்.ஐ. உள்பட 7 போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

 

ஆரம்பத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி அதிமுக நகர மாணவர் அணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரன்பால், பாபு என்கிற பைக் பாபு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கடைசியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பொள்ளாச்சி கிட்டசூரம்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரையும் கைது செய்தனர். 

 

இவர்கள் 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை, கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

 

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள மேற்சொன்ன 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (அக். 20) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்கள், நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் நகல் 9 பேரிடமும் வழங்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக். 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 9 பேரும் இரு வாகனங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

 

இதில் வழக்கின் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரை அழைத்துச் சென்ற வாகனம் மட்டும் கோவை விமான நிலைய சாலை அருகே திடீரென்று நிறுத்தப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரின் உறவினர்கள் அப்பகுதியில் ஏற்கனவே காத்திருந்தனர். இதையடுத்து, 5 பேரும் வாகனத்தில் இருந்தபடி தங்களது உறவினர்களிடம் சந்தித்து சிறிது நேரம் பேச அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அந்த வாகனம் அங்கிருந்து கிளம்பியது. 

 

New controversy erupts in Pollachi  case 7 Armed Police Suspended!

 

இந்நிலையில், தமிழகத்தை உலுக்கிய முக்கிய வழக்கான பொள்ளாச்சி பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் இவர்களுக்கு சேலம் மாநகர காவல்துறை அளித்துள்ள இந்த சலுகை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா விசாரணை நடத்தினார். இதில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதிகளுக்கு வழிக்காவல் பணிக்குச் சென்றது சேலம் மாநகர ஆயுதப்படை சிறப்பு எஸ்ஐ சுப்ரமணியம், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகியோர்தான் என்பது தெரிய வந்தது. 

 

வழிக்காவல் பணியின்போது கவனக்குறைவாகவும், ஒழுங்கீனமாகவும் செயல்பட்டதாக சிறப்பு எஸ்ஐ உள்ளிட்ட 7 பேரையும் ஆணையர் நஜ்மல் ஹோடா அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு, புதன்கிழமை இரவே பிறப்பிக்கப்பட்டது.

 

இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களை சந்திக்க விரும்புவோர் அதற்கென முறையாக விண்ணப்பம் செய்து, சிறைத்துறையில் அனுமதி பெற்ற பிறகே சந்திக்க வேண்டும். ஆனால், நடுவழியில் கைதிகளை உறவினர்களுடன் சந்திக்க வைத்தது நடைமுறைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, கைதிகளுக்கும் அசம்பாவிதங்கள் நடக்கும் அபாயம் உள்ளது என்கிறார்கள் காவல்துறையினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.